இந்தியா
புதுச்சேரி மாணவர் காங்கிரஸ் தலைவர் மீது தாக்குதல்: த.வெ.க நிர்வாகிக்கு போலீஸ் வலைவீச்சு

புதுச்சேரி மாணவர் காங்கிரஸ் தலைவர் மீது தாக்குதல்: த.வெ.க நிர்வாகிக்கு போலீஸ் வலைவீச்சு
புதுச்சேரி பூமியான் பேட்டை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவபெருமாள் (47). இவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு சிவபிரகாஷ் சூரியமூர்த்தி என இரண்டு மகன்கள் உள்ளனர்.இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மர்ம நபர்கள் 10-க்கும் மேற்பட்டோர் வீட்டில் புகுந்து அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தியதோடு வீட்டில் இருந்தவர்களை தாக்கியதாக சிவபெருமாள் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் சிவபெருமாள் மூத்த மகன் சிவப்பிரகாஷ் புதுச்சேரி மாநில மாணவர் காங்கிரஸ் துணைத் தலைவராக உள்ளார் .அவருக்கு அப்பகுதியில் பிறந்தநாள் வாழ்த்து பேனர் வைத்துள்ளனர். அதனை முரளி என்பவர் கிழித்துள்ளார். இதுகுறித்து அவரது தாயார் கேட்டதற்கு தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.இதுகுறித்து இருதரப்பையும் போலீசார் காவல் நிலையம் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பேனர் கிழித்ததற்கு முரளி மன்னிப்பு கேட்டதால் வழக்கு ஏதும் பதிவு செய்யப்படாமல் சமாதானமாகச் சென்றனர். தனது ஆதரவாளரை காவல் நிலையம் அழைத்து மன்னிப்பு கேட்க வைத்ததால் ஆத்திரம் அடைந்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகி அருள்பாண்டி, அருள்குமார், சாரங்கபாணி, முரளி, சஞ்சய், ரவி, சர்வின், விஜய பாரதி, கணேஷ் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் வீடு புகுந்து புதுச்சேரி மாநில மாணவர் காங்கிரஸ் துணைத் தலைவர் சிவப்பிரகாஷ் மற்றும் பொதுச் செயலாளர் சூரியமூர்த்தி அவர்களது தந்தை சிவபெருமாள் மற்றும் தாயார் ஆகியோரை சரமாரியாக தாக்கி அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்து கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளது.அதனை தொடர்ந்து, தமிழக வெற்றிக்கழக புதுச்சேரி கதிர்காமம் தொகுதி நிர்வாகி அருள் பாண்டி மற்றும் அருள் குமார் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள 9 பேரையும் தேடி வருகின்றனர்.வலியுறுத்தல் இதனிடையே, புதுச்சேரி மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் வைத்திலிங்கம் எம.பி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் மாணவர் காங்கிரஸ் நிர்வாகி இல்லத்தில் நேரில் சென்று நடந்த சம்பவம் பற்றி விசாரித்து நிர்வாகி குடும்பத்திற்க்கு ஆறுதல் கூறினர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், எஸ்.பி-யை தொலைபேசியில் தொடர்புகொண்டு உடனடியாக சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்ய வலியுறுத்தியதாக கூறினர். மேலும், தாமதப்படுத்தினால் எஸ்.எஸ்.பி மற்றும் டி.ஐ.ஜி ஆகியோர்களுக்கு கடிதம் மூலம் புகார் தெரிவிக்கப்படும் என்றும், காங்கிரஸ் சார்பில் மிக பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறினர். செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“