விளையாட்டு
IPL Auction 2025 : நடராஜனுக்கு ஜாக்பாட்.. 3 அணிகள் போட்டி.. ரூ.10.75 கோடிக்கு ஏலம் போன வேகப்புயல்

IPL Auction 2025 : நடராஜனுக்கு ஜாக்பாட்.. 3 அணிகள் போட்டி.. ரூ.10.75 கோடிக்கு ஏலம் போன வேகப்புயல்
நடராஜன்
ஐபிஎல் மெகா ஏலத்தின்போது தமிழக வீரர் நடராஜனுக்கு (T Natarajan)அதிக டிமாண்ட் காணப்பட்டது. அவரை எடுப்பதற்கு 3 அணிகளுக்கு இடையே போட்டி காணப்பட்ட நிலையில், ரூ. 10.75 கோடிக்கு டெல்லி அணி வாங்கியது.
2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 10 ஐபிஎல் அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த ஏலத்தில் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ. 18 கோடி கொடுத்து ஆர்.டி.எம் முறையில் தக்க வைத்துக் கொண்டது.
ஷ்ரேயாஸ் ஐயர் ரூ. 26.75 கோடிக்கு பஞ்சாப் அணியாலும், ரிஷப் பந்த் ரூ. 27 கோடிக்கு லக்னோ அணியாலும் விலைக்கு வாங்கப்பட்டனர். இதேபோன்று ஏலத்தில் கலக்கிய சென்னை அணி நிர்வாகிகள் அஷ்வினை சாதுர்யமாக செயல்பட்டு விலைக்கு வாங்கினர்.
2022 ஏலத்தின்போது ராஜஸ்தான் அணிக்கு சென்ற ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு அடிப்படை விலையாக ரூ. 2 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இவரை வாங்குவதில் கடும் போட்டி காணப்பட்ட நிலையில் ரூ. 9.75 கோடிக்கு சென்னை அணி விலைக்கு வாங்கியது. இதன்படி 10 ஆண்டுகளுக்கு பின்னர் சென்னை அணியில் மீண்டும் இணைகிறார் அஷ்வின்.
இதேபோன்று சூப்பர் ஃபார்மில் இருக்கும் நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ரச்சின் ரவிந்திராவை ரூ. 4 கோடி கொடுத்து சென்னை அணி ஏலத்தில் எடுத்திருக்கிறது. ஏற்கனவே சென்னை அணியில் இருந்த முக்கிய ஆட்டக்காரரான டெவோன் கான்வே ரூ. 6.25 கோடிக்கு சென்னை அணியால் வாங்கப்பட்டுள்ளார்.
ஏலத்தின்போது தமிழக வீரரான நடராஜனை வாங்குவதில் அவரை விடுவித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் அதிக ஆர்வம் காட்டின. அவருக்கான அடிப்படை விலை ரூ. 2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. அவரை, ரூ. 4.50 கோடி வரை வாங்குவதற்கு சன்ரைசர்ஸ் அணி ஆதரவு காட்டியது.
அதன்பின்னர் போட்டியில் டெல்லி மற்றும் பெங்களூரு அணி இணைந்தது. இறுதியாக ரூ. 10.75 கோடிக்கு நடராஜனை வாங்கியது டெல்லி அணி. கடந்த முறை ரூ. 4 கோடிக்கு அவரை ஐதராபாத் அணி வாங்கியிருந்த நிலையில், தற்போது அவர் ரூ. 10.75 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார். இதையொட்டி நடராஜனுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.