உலகம்
Maharashtra Election Results: தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதி.. ஹாட்ரிக் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் தமிழ்ச்செல்வன்!

Maharashtra Election Results: தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதி.. ஹாட்ரிக் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் தமிழ்ச்செல்வன்!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கு கடந்த 20ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவாகிய வாக்குகள் நவம்பர் இன்று (23-ம் தேதி) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்தத் தேர்தலில், ஆளும் கூட்டணி அரசான பா.ஜ.க – சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணியோடும், இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய கட்சிகள் ஒரு கூட்டணியாகவும் தேர்தலைச் சந்தித்தன.
மகாராஷ்டிராவில் மொத்தம் 288 தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியை பிடிக்க பெரும்பான்மையாக 145 இடங்கள் தேவை.
இதில், பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 187 இடங்களில் வெற்றி, 48 இடங்களில் முன்னிலை என 235 இடங்களை தன் வசம் வைத்துள்ளது. அதேபோல், காங்கிரஸ் கூட்டணியான மகா விகாஸ் அகாடி 42 இடங்களில் வெற்றி, 7 இடங்களில் முன்னிலை என மொத்தம் 49 இடங்களை தன் வசம் வைத்துள்ளது.
இதன் மூலம் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை பாஜக கூட்டணி கைப்பற்ற உள்ளது. இதனால், மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.
இந்தத் தேர்தலில் நட்சத்திர வேட்பாளர்கள் கவனிக்கப்பட்டதுபோலவே, ஒரு தமிழரின் தேர்தல் முடிவும் பெரிதாக கவனிக்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த இரு முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் தமிழர் கேப்டன் தமிழ்ச்செல்வன்.
இதையும் படியுங்கள் :
Wayanad By Election: “உங்களின் குரலாக ஒலிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” – வயநாடு மக்களுக்கு பிரியங்கா நன்றி!
தமிழ்ச்செல்வன் பாஜக சார்பாக சியோன் கோலிவாடா தொகுதியில் போட்டியிட்டார். இந்தத் தொகுதியில் தமிழர்கள் அதிகளவில் வசித்துவருகின்றனர். இவரை எதிர்த்து தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட காங்கிரஸ் தரப்பில் கணேஷ் குமார் யாதவ் போட்டியிட்டார். இதில், கேப்டன் தமிழ்ச்செல்வன் மொத்தம் 73,429 வாக்குகளையும், கணேஷ் 65,534 வாக்குகளையும் பெற்றனர். இதன் மூலம், கேப்டன் தமிழ்ச்செல்வன் 7,895 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.