உலகம்
Maharashtra Election Results: தோல்வி டூ மெகா வெற்றி… 6 மாதங்களில் களத்தை மாற்றியமைத்த பாஜக.. எப்படி சாத்தியமானது?

Maharashtra Election Results: தோல்வி டூ மெகா வெற்றி… 6 மாதங்களில் களத்தை மாற்றியமைத்த பாஜக.. எப்படி சாத்தியமானது?
நாடாளுமன்ற தேர்தலில் மகாராஷ்டிராவில் பெரும் பின்னடைவை சந்தித்திருந்தது பாஜக கூட்டணி. ஆறே மாதங்களில் பெரும் வெற்றி எப்படி சாத்தியமானது? அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு…
ஒன்றிணைந்தால் பாதுகாப்பு என பொருள்படும் இந்த முழக்கத்தை மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் மோடி அடிக்கடி பயன்படுத்தினார். அவரின் அந்த முழக்கத்திற்கு பலனும் கிடைத்துள்ளது.
அங்கு மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 48 இடங்களில் எதிர்க்கட்சி கூட்டணியான மகா விகாஸ் அகாடி 30 தொகுதிகளிலும் மகாயுதி 17 இடங்களிலும் வெற்றி பெற்றன. அந்த நிலையை தற்போதைய சட்டமன்ற தேர்தல் முடிவு புரட்டிப்போட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலை விட, தற்போது 53 லட்சம் பெண்கள் அதாவது 6 சதவிகிதம் பேர் கூடுதலாக வாக்களித்துள்ளனர். பெண்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்ற ‘லட்கி பெஹன் யோஜனா’ திட்டத்தில் பயனடைந்தவர்கள் மகாயுதி கூட்டணியை தேர்வு செய்துள்ளனர்.
இத்திட்டத்தில் 2.5 கோடி பெண்களுக்கு தேர்தல் வரை தலா ரூ.1,500 வீதம் ஐந்து தவணையாக வழங்கப்பட்டது. மேலும் இது விரிவுப்படுத்தப்பட்டு, ரூ.2,100 ஆக அதிகரிக்கப்படும் என மகாயுதி கூட்டணி வாக்குறுதி அளித்திருந்தது. எனினும் பெண்களுக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும் என காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி அளித்த வாக்குறுதியை பெண்கள் புறந்தள்ளியுள்ளனர்.
பெண்கள் மட்டுமல்லாமல் விவசாயிகளும் பெருவாரியாக பாஜக தலைமையிலான கூட்டணியை ஆதரித்துள்ளனர். பருத்தி மற்றும் சோயாபீனுக்கு குறைந்தபட்ச ஆதார விலை அளிக்கப்படும் என்ற பாஜகவின் வாக்குறுதி அக்கூட்டணிக்கு வாக்குகளை அள்ளி கொடுத்துள்ளது.
வழக்கமாக விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்காத பாஜக, இத்தேர்தலில் அதற்கு மாறான நிலைப்பாட்டை எடுத்தது. இதன் காரணமாக விவசாயிகள் அதிகம் வாழும் விதர்பாவில் ஜாக்பாட் அடித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் இப்பகுதியில் மொத்தமுள்ள 10 தொகுதிகளில் 8-ல் தோல்வியடைந்திருந்தது பாஜக. தற்போது 11 மாவட்டங்களில் உள்ள 62 தொகுதிகளில் பெருபான்மையானவற்றை கைப்பற்றியுள்ளது.
பாஜகவின் அமோக வெற்றிக்கு மற்றொரு காரணம் ஓபிசியின் வாக்குகளை அள்ளியது. பிரதமரின் “ஒன்றிணைந்தால் பாதுகாப்பு” என்ற முழக்கம் மகாராஷ்டிராவில் பெருத்த வரவேற்பை பெற்றது.
மராட்டிய இடஒதுக்கீட்டு விவகாரம், மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணிக்கு எதிராக அமைந்தது. இத்தேர்தலில் OBC-க்களின் வாக்குகள் பாஜகவிற்கு சாதகமாக அமைந்தது.
பாஜகவின் மிகப்பெரிய வெற்றிக்கு முக்கிய காரணம் சரத் பவார் கட்சியின் சரிவு மற்றும் பாஜகவுடன் நேரடியாக மோதிய இடங்களில் காங்கிரஸ் பெற்ற தோல்வியுமே ஆகும்.
76 இடங்களில் பாஜகவும் காங்கிரஸும் நேரடியாகப் போட்டியிட்டன. இவற்றில் ஏறத்தாழ அனைத்து தொகுதிகளிலும் பாஜக வென்றுள்ளது.
இவற்றையெல்லாம் தாண்டி, ஆர்.எஸ்.எஸ். நடத்திய 60 ஆயிரம் பரப்புரை கூட்டங்கள் பாஜகவிற்கு பெரும் வெற்றியை தேடித் தந்துள்ளது. இது மட்டுமல்லாமல் வீடுவீடாக சென்ற ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மக்களை வாக்களிக்க வலியுறுத்தினர். இதனால் அங்கு கடந்த தேர்தலை விட 5 சதவிகிதம் கூடுதல் வாக்குகள் பதிவாகின.
இக்காரணங்களால், முன் எப்போதும் இல்லாத வகையில் மகாராஷ்டிராவில் பாஜகவின் ஸ்டிரைக் ரேட் 90 சதவிகிதத்தை கடந்துள்ளது.