உலகம்
அனுசரணையாளராக செயற்படுவதை இடைநிறுத்திய கட்டார்

அனுசரணையாளராக செயற்படுவதை இடைநிறுத்திய கட்டார்
இஸ்ரேலிற்கும் ஹமாசிற்கும் இடையில் பணயக்கைதிகள் விடுதலை ,யுத்த நிறுத்த பேச்சுவார்த்தைகள் போன்றவற்றில் அனுசரணையாளராக செயற்படுவதை கட்டார் இடைநிறுத்தியுள்ளது.
இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தினால் மாத்திரமே மீண்டும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடப்போவதாக கட்டார் தெரிவித்துள்ளது.
கட்டாரில் ஹமாஸ் அமைப்பின் பிரதிநிதிகள் செயற்படுவதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையிலேயே கட்டாரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஹமாசினை தனது அரசியல் அலுவலகத்தினை மூடுமாறு கத்தார் கேட்டுக்கொள்ள வேண்டும் என அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கட்டார் அதற்கு இணங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் கட்டாரின் வெளிவிவகார அமைச்சு இதனை நிராகரித்துள்ளது. ஹமாஸ் அமைப்பும் இதனை நிராகரித்துள்ளது.
ஹமாசிற்கும் இஸ்ரேலிற்கும் இடையிலான இணக்கப்பாட்டினை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள கட்டார் கடந்த சுற்றுப்பேச்சுவார்த்தைகளின் போது இரு தரப்பும் இணக்கத்திற்கு வராவிட்டால் அனுசரணை முயற்சிகளை இடைநிறுத்தப்போவதாக தெரிவித்திருந்தது என கட்டார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.