இலங்கை
கிளி.யில் இடம்பெற்ற விற்பனை கண்காட்சி!

கிளி.யில் இடம்பெற்ற விற்பனை கண்காட்சி!
தீபாவளி தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்டத்தின் சௌபாக்கியா உற்பத்தி கிராம சுயதொழில் முயற்சியாளர்களுக்கான விற்பனை கண்காட்சி இன்று புதன்கிழமை(30) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
உள்ளூர்உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட சௌபாக்கியா உற்பத்தி கிராம வேலைத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட சுயதொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களின் விற்பனை கண்காட்சி பசுமை பூங்கா வளாகத்தில் இன்று இடம்பெறுகின்றது.
கிளிநொச்சி மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர் ச.மோகனபவன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட பதில் மாவட்ட செயலர் எஸ். முரளிதரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு குறித்த விற்பனைக் கண்காட்சியினை நாடாவெட்டி திறந்து வைத்தார்.
நிகழ்வின் சிறப்பு விருத்தினர்களாக இளைப்பாறிய திட்டமிடல் பணிப்பாளர் கி.ஸ்ரீபாஸ்கரன், விவசாயத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் சோதிவிஜயதாசன், மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் உதவிப்பணிப்பாளர் ச.சசீபன், கண்டாவளை பிரதேச கால்நடை மருத்துவ அதிகாரி மருத்துவர் கஜஞ்சன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், துறை சார்ந்த திணைக்கள உத்தியோகத்தர்கள், சுயதொழில் முயற்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த விற்பனைக்கூடங்களில் மரக்கன்றுகள், பூங்கன்றுகள், மரக்கறிகள், கீரை வகைகள், சிறு உற்பத்தி பொருட்கள், சிறுதானிய உற்பத்திகள் உள்ளடங்கிய விற்பனைக் கூடங்களும் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (ச)