விநோதம்
இதை செய்தால் போதும்.. குளிர் காலத்தில் ஏற்படும் வறண்ட சருமத்திற்கான தீர்வு

இதை செய்தால் போதும்.. குளிர் காலத்தில் ஏற்படும் வறண்ட சருமத்திற்கான தீர்வு
குளிர் காலம் வந்துவிட்டது. பண்டிகைகள் மற்றும் விடுமுறைகளை மகிழ்ச்சியோடு அனுபவிக்க வேண்டிய நேரம். கதகதப்பாக போர்வைக்குள் அமர்ந்து கொண்டு, சூடாக ஒரு கப் டீ குடித்துக் கொண்டே, நமக்கு பிடித்தமான டிவி ஷோக்களை பார்ப்பதில் இருக்கும் சுகமே தனி. ஆனால் குளிர்காலம் என்பது ஒரு சில பிரச்சனைகளையும் உடன் கொண்டு வருகிறது. அதில் குறிப்பாக சரும மற்றும் தலைமுடி பிரச்சனைகள் அடங்கும்.
சரும பிரச்சனைகள் என்று பேசும்போது, வறண்ட சருமம் குளிர் காலத்தில் பலருக்கு தொந்தரவு கொடுக்கக் கூடியதாக இருக்கும். குளிர்ந்த காற்று சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை அகற்றி அதனை வறண்டதாக மாற்றும். ஒரு சிலருக்கு அரிப்பும் ஏற்படும். போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மற்றும் சரியான சரும பராமரிப்பு முறையை பின்பற்றுவதன் மூலமாக இதனை நாம் சரி செய்யலாம். அந்த வகையில் குளிர்காலத்தில் ஏற்படும் வறண்ட சரும பிரச்சனையை சரி செய்வதற்கு உதவும் சில வீட்டு வைத்தியங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
வெதுவெதுப்பான தண்ணீரில் குளிப்பது
சூடான தண்ணீரில் நீண்ட நேரம் குளிப்பது குளிர் காலத்திற்கு இதமளிப்பதாக இருந்தாலும், அது நம்முடைய சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்களை அகற்றி அதற்கு மேலும் சேதத்தை ஏற்படுத்தும். எனவே குளிர்கால மாதங்களில் உங்களுடைய குளியல் நேரத்தை குறைத்துக் கொண்டு குளிப்பதற்கு வெந்நீருக்கு பதிலாக வெதுவெதுப்பான தண்ணீரை பயன்படுத்துவது நல்லது. மேலும் உங்களுடைய சருமத்திற்கு வழக்கமாக பயன்படுத்தும் சோப்பை விட கெமிக்கல்கள் இல்லாத ஜென்டில் சோப் பயன்படுத்துவது அவசியம்.
தேங்காய் எண்ணெய் பயன்படுத்துதல்
தேங்காய் எண்ணெய் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை தக்கவைத்து, தோலுக்கு ஒரு இயற்கை தடையாக செயல்படுகிறது. குளித்துவிட்டு வந்தவுடன் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை தக்க வைப்பதற்கு நீங்கள் தேங்காய் எண்ணெய் தடவலாம். மேலும் தேங்காய் எண்ணெயில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் தோலில் வறட்சியை ஏற்படுத்தும். மேலும், தொற்றுகளில் இருந்து உங்களுடைய சருமத்தை பாதுகாக்கும்.
தேன் மற்றும் பால் மாஸ்க்
தேன் மற்றும் பால் ஆகிய இரண்டுமே நமக்கு பல அதிசயங்களை செய்யக்கூடியவை. இவை இரண்டையும் இணைத்து சருமத்தில் பயன்படுத்துவது, இறந்த செல்களை அகற்றி தேவையான ஈரப்பதத்தை வழங்கி, சருமத்தை மென்மையாக்கும். தேன் மற்றும் பால் கலவையை சருமத்தில் மசாஜ் செய்வது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, உங்களுக்கு மென்மையான மற்றும் பொலிவான சருமத்தை தரும்.
ஓட்மீல் குளியல்
சருமத்தில் உள்ள எரிச்சலை ஆற்றி, அதில் உள்ள ஈரப்பதத்தை மீட்டெடுப்பதற்கு நீங்கள் வழக்கமாக குளிக்கும் வெதுவெதுப்பான தண்ணீரில் பொடியாக அரைத்த ஓட்மீலை சேர்க்கலாம். ஓட்மீலில் உள்ள வீக்க எதிர்ப்பு விளைவுகள் அரிப்பு மற்றும் சிவத்தலை குறைத்து, வறட்சியை போக்குகிறது. குளித்த பிறகு சருமத்தை உலர வைத்து அதில் மாய்சரைசர் தடவுங்கள்.
இதையும் படிக்க:
இரவில் படுக்கும் முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பதால் உடலில் நடக்கும் மாற்றங்கள் என்ன..?
ரோஸ் வாட்டர் மற்றும் கிளிசரின்
இயற்கையான டோனரை உருவாக்குவதற்கான மற்றொரு எளிமையான வீட்டு வைத்தியம் ரோஸ் வாட்டர் மற்றும் கிளிசரின் பயன்படுத்துவது. தூங்குவதற்கு முன்பு இதனை உங்கள் தோலில் பயன்படுத்துவது இரவு முழுவதும் உங்கள் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை வழங்கும். மேலும் இதனை உங்களுடைய கைகள் மற்றும் கால்களிலும் தடவலாம். இந்த கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் கலவை, சருமத்தை மென்மையாக்கி மினுமினுக்கச் செய்யும்.