இந்தியா
வக்பு மசோதா: மக்களவை சபாநாயகருக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடிதம்

வக்பு மசோதா: மக்களவை சபாநாயகருக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடிதம்
வக்பு மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் காலத்தை நீட்டிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்பிகள், மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
வக்பு மசோதா தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் நடந்தது. பிகார், புதுடெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் தங்கள் கருத்துகளை இனிதான் தெரிவிக்க உள்ளதாகவும், இதேபோல் பல்வேறு அமைப்புகளும் தங்கள் கருத்துகளை தெரிவிக்க முன்வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே உள்ள சட்டங்களில் பல மாற்றங்களை செய்யும் வகையில் வக்பு சட்டத்திருத்த மசோதா உள்ளதாகவும், அவ்வாறு செய்யப்படும் மாற்றங்கள் இந்திய மக்கள் தொகையில் பெரும்பாலானவர்களை பாதிக்கும் என்றும் எம்பிக்கள் தெரிவித்துள்ளனர். எனவே விவாதிப்பதற்காக 3 மாத காலம் என்பது போதுமானதாக இல்லை என்றும் எம்பிகள் கூறியுள்ளனர்.
வக்பு மசோதா தொடர்பாக விவாதிக்க கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் எம்பிகள் வலியுறுத்தியுள்ளனர். வக்பு மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் காலக்கெடு வரும் 29ஆம் தேதி நிறைவடையும் நிலையில் எதிர்க்கட்சி எம்பிக்களின் கடிதம் கவனம் பெற்றுள்ளது.