இந்தியா
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா..? இந்திய வானிலை மையம் புதிய அப்டேட்!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா..? இந்திய வானிலை மையம் புதிய அப்டேட்!
வங்கக் கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்காலிக புயலாக மாறும் என தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் பாலச்சந்திரன் இன்று மாலை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த தென் மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன், “ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாகை தென்கிழக்கே சுமார் 310 கி.மீ தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே சுமார் 410 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 480 கி.மீ. தொலைவிலும் இருக்கிறது. இது வடக்கு வட மேற்கு திசையில் நகர்ந்து வரும் 30-ம் தேதி காலை காரைக்காலுக்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கக்கூடும்.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று இரவு முதல் நாளை காலை வரையிலான காலகட்டத்தில் தற்காலிக புயலாக வலு பெறக்கூடும். அதன்பிறகு அது வலுவிழந்து கரையைக் கடக்கும்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்கக்கூடும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறாது என இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, வங்கக் கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறாது. மேலும், அது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை மறுநாள் (30ம் தேதி) காலை காரைக்கால் – மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் எனத் தெரிவித்துள்ளது.