விளையாட்டு
IPL Auction 2025 : ஐபிஎல் ஏலத்தில் 13 வயது வீரரை எடுத்த ராஜஸ்தான்… யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி?

IPL Auction 2025 : ஐபிஎல் ஏலத்தில் 13 வயது வீரரை எடுத்த ராஜஸ்தான்… யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி?
நடைபெற்று முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் 13 வயது கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மிக குறைந்த வயதுடைய நபர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்சி ஏற்படுத்தியுள்ளார்.
ஐபிஎல் மெகா ஏலத்தின் இரண்டாவது நாளின் போது பீஹாரை சேர்ந்த சூர்யவன்சியை 1 கோடியே 10 லட்ச ரூபாய் கொடுத்து ராஜஸ்தான் அணி விலைக்கு வாங்கியது. இவரை ஏலத்தில் எடுக்கும் போது ராஜஸ்தான் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே கடும் போட்டி காணப்பட்டது. இரு அணிகளிடமும் குறைவான தொகை இருந்த சூழலில் ராஜஸ்தான் அணி சூர்யவன்சியை தன்வசப்படுத்தியது.
2011 ஆம் ஆண்டு பிறந்த வைபவ் சூர்யவன்சி 4 வயது முதலே கிரிக்கெட் விளையாடி வருகிறார். இவரது திறமையை பார்த்த அவரது தந்தை சஞ்சீவ் தனது வீட்டிற்கு பின்னாலேயே சிறிய அளவிலான கிரிக்கெட் மைதானத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். வைபவ் சூர்யவன்சிக்கு 9 வயது ஆக இருக்கும் போது கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்தார்.
அங்கு இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக பயிற்சி பெற்ற நிலையில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான விளையாட்டுப் பிரிவில் சேர்ந்து அபாரமான திறமையை வைபவ் வெளிப்படுத்தினார். அவரது வெற்றிக்கு பயிற்சியாளராக இருந்த மனிஷ் ஓஜா என்பவர் முக்கிய காரணமாக இருந்துள்ளார்.
பீஹாரில் நடைபெற்ற வினோ மான்கட் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் 5 மேட்ச்களில் விளையாடிய வைபவ் 400 ரன்களை எடுத்துள்ளார். 12 வயதில் பீஹார் மாநில அணிக்காக இவர் விளையாடி இருக்கிறார். ஆஸ்திரேலியா யு 19 அணிக்கு எதிராக சென்னையில் 4 நாட்கள் நடந்த போட்டியின் போது 58 பந்துகளில் சூர்யவன்சி சதம் அடித்திருக்கிறார்.
இதேபோன்று இந்தியா பி 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியிலும் வைபவ் சூர்யவன்சி இடம் பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் வங்கதேசத்திற்கு எதிரான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியிலும் இவர் இடம் பிடித்தார்.
இவரது சீரான வளர்ச்சியை பார்த்த இந்திய அணியின் செலக்டர்கள் அவரை 2024 – 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஐசிசி உலகக் கோப்பை தொடரில் விளையாட தேர்வு செய்தனர். தற்போது ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மிக குறைந்த வயதில் அணியில் சேர்க்கப்பட்ட வீரர் என்ற புதிய சாதனையையும் வைபவ் சூர்யவன்சி ஏற்படுத்தியுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.