விநோதம்
அட்சய திருதியையில் தங்கம் வாங்குவதற்கான காரணம் என்ன தெரியுமா…!

அட்சய திருதியையில் தங்கம் வாங்குவதற்கான காரணம் என்ன தெரியுமா…!
(இன்று ஒரு தகவல்)
அட்சய திருதியை அன்று எதுவும் வாங்க முடியாதவர்கள் கண்டிப்பாக கல் உப்பு மட்டுமாவது வாங்கி வீட்டில் வைக்க வேண்டும். இந்த நாளில் மகாவிஷ்ணுவையும், மகாலட்சுமியையும் அதிகாலையில் வணங்க வேண்டும். பாயசம் நைவேத்தியமாக செய்து படைக்க வேண்டும்.
அட்சய திருதியை என்பது இந்தியாவில் இந்துக்களால் கொண்டாடப்படும் முக்கியமான மங்கல நாளாகும். இந்துக்கள் மட்டுமின்றி சமணர்களாலும் கொண்டாடப்படும் ஒரு புனித நாளாக அட்சய திருதியை உள்ளது. சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் திருதியை நட்சத்திரம் அட்சய திருதியையாக கொண்டாடப்படுகிறது.
அட்சய திருதியை நாள் என்றாலே தங்கம் வாங்குவதற்கு ஏற்ற மங்கலகரமான நாள் என்று மட்டும் தான் பலருக்கும் தெரியும். ஆனால் இந்த நாளில் வேறு என்னவெல்லாம் சிறப்பு உள்ளது, எதற்காக இந்த நாளில் தங்கம் அல்லது ஏதாவது ஒரு மங்கல பொருளை வீட்டில் வாங்கி வைக்க வேண்டும் என சொல்கிறார்கள் என பலருக்கும் தெரியாது.
அட்சய என்றால் அள்ள அள்ள குறையாத என்று பொருள். 15 நாட்களுக்கு ஒருமுறை முழற்சி முறையில் வரும் திதிகளில் மூன்றாவது திதியாக வருவது திருதியை. திருதியை என்ற சொல் மூன்றாவது என்பதை குறிப்பதாகும். அட்சய திருதியை நாளில் தான் கிருதயுகம் தோன்றியதாக பவிஷ்யோத்தர புராணம் சொல்கிறது. பகீரதன் தவம் செய்து, கங்கையை பூமிக்கு கொண்டு வந்த நாளும் இந்த அட்சய திருதியை நாளில் தான்.
மகாலட்சுமி தவம் செய்து, திருமாலின் திருமார்பில் நிரந்தரமாக இடம் பிடித்ததும் இந்த அட்சய திருதியை நாளில் தான். குபேரன், செல்வத்திற்கு அதிபதியாக மகாலட்சுமியிடம் இருந்து வரம் பெற்றதும், பிட்சாடனராக வந்த சிவ பெருமான் தனது பசி பிணி தீர அன்னபூரணியிடம் தனது யாசக பாத்திரம் நிரம்பப் பெற்றதும் இதே அட்சய திருதியை நாளில் தான். மகாவிஷ்ணுவின் 6வது அவதாரமான பரசுராமர் அவதாரம் செய்ததும் இந்த நாளில் தான்.
அமாவாசையில் இருந்து மூன்றாவதாக வரும் திதி திருதியை. மூன்றாவது எண்ணுக்குரிய அதிபதி குரு பகவான் ஆவார். இவர் உலோகங்களில் தங்கத்தை பிரதிபலிக்கக் கூடியவர். நவகிரகங்களில் மங்களகாரகன் என போற்றப்படும் குருவுக்கு பொன்னன் என்ற பெயரும் உண்டு. இதன் காரணமாகவே அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்க வேண்டும். இந்த நாளில் தங்கம் வாங்கினால் மங்கலங்கள் அதிகரித்து, தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும் என சொல்லப்படுகிறது.
வட மாநிலங்களில் அட்சய திருதியை நாளில் தான் விநாயகரையும், மகாட்சுமியையும் வணங்கி புது கணக்கினை துவங்குவார்கள். மகாலட்சுமியின் அருளை அனைவரும் பெற வேண்டும் என்பதே அட்சய திருதியை தினத்தின் நோக்கமாகும். இப்படி எண்ணற்ற சிறப்புக்களையும், பெருமைகளையும் கொண்ட தினம் அட்சய திருதியை என்பதால் தான் இந்த நாளை தவற விடாமல் பூஜை செய்து வழிபட வேண்டும் என்கிறார்கள். இந்த நாளில் முன்னோர்க்கு தர்ப்பணம் கொடுப்பதும் பல மடங்கு புண்ணிய பலனை தரும்.
யாசகம் கேட்டு வந்த சிறுவனுக்கு கொடுப்பதற்கு கூட எதுவும் இல்லையே என வருந்திய ஏழை தாய், தேடி பிடித்து வீட்டில் அழுகும் நிலையில் இருந்த நெல்லிக்கனியை கொண்டு வந்து கொடுத்தார். கொடுப்பதற்கு எதுவும் இல்லாத நிலையிலும் தானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அந்த தாயின் கருணையை நினைத்து வருந்திய ஆதிசங்கரர், மகாலட்சுமி தேவியை நினைத்து மனமுருகி கனகதாரா ஸ்தோத்திரம் பாடியதும், அந்த வீட்டின் மீது தங்க நெல்லிக்கனி மழையாக பொழிந்தது அட்சய திருதியை நாளில் தான்.(ப)