இந்தியா
அதானி விவகாரம் : முதலமைச்சரிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய அன்புமணி ராமதாஸ்…

அதானி விவகாரம் : முதலமைச்சரிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய அன்புமணி ராமதாஸ்…
அன்புமணி
அதானி மின்சாரத்திற்கு அதிக விலை ஏன்? 800 மெகாவாட் மின் ஆலை 10 மாதங்களாகியும் இயங்காதது ஏன்? என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணம் கடந்த இரு ஆண்டுகளில் சுமார் ரூ.41,000 கோடி அளவுக்கு உயர்த்தப்பட்ட பிறகும், மின்சார வாரியம் தொடர்ந்து இழப்பை எதிர்கொண்டு வருகிறது. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நிலவும் ஊழல்களும், முறைகேடுகளும் தான் இதற்கு காரணம் என்று குற்றச்சாட்டுகள் எழுப்பப்படும் நிலையில், அவற்றைத் தடுப்பதற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
அதானி குழும நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தில் 1000 மெகாவாட் மின்சாரத்தை இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்தின் வாயிலாக வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்து கொள்வதற்காக தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் கையூட்டு வழங்கப்பட்டதாக அமெரிக்காவின் நியூயார்க் கிழக்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அது குறித்து விசாரணை நடத்தப் பட வேண்டும்; கடந்த ஜூலை மாதத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கவுதம் அதானி சந்தித்ததாக கூறப்படுவது குறித்து விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் வலியுறுத்தியிருந்தார். அதன்பின் ஒரு வாரத்திற்கு மேலாகியும் இன்று வரை தமிழ்நாடு அரசு எந்த விசாரணைக்கும் ஆணையிடவில்லை; சந்திப்பு தொடர்பாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை என குற்றம் சாட்டி உள்ளார்.
இந்த விவகாரங்கள் குறித்து மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கமளித்துவிட்டதாகக் கூறி, இந்தக் குற்றச்சாட்டுகளை கடந்து செல்ல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துடிக்கிறார். அதானி குழும நிறுவனங்களுக்கும், தமிழ்நாடு மின்வாரியத்திற்கும் கடந்த மூன்றாண்டுகளில் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளப்படவில்லை என்பது தான் செந்தில்பாலாஜி அளித்த விளக்கம். அதுவும் தவறானது. அதானி குழுமம் தயாரிக்கும் சூரிய ஒளி மின்சாரத்தை வாங்குவதற்காக இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்துடன் தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது; இதற்கான மின்வாரியத்தின் உயரதிகாரிகளுக்கு அதானி குழுமம் கையூட்டு கொடுத்திருக்கிறது என்பது தான் அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கின் சாரம் ஆகும். இந்தக் குற்றச்சாட்டுக்கு இதுவரை அரசு விளக்கமளிக்கவில்லை என விமர்சித்துள்ள அன்புமணி,
அதானி குழுமத்திடமிருந்து ஒரு யூனிட் ரூ.2.61 என்ற விலைக்கு தான் மின்சாரம் வாங்கப்படுகிறது; இது மிகவும் குறைவான கட்டணம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருக்கிறார். இது அப்பட்டமான பொய் என்பது மட்டுமின்றி, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் செயலாகும். இது அன்றைய சந்தை விலையை விட 30% அதிகம். தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும், இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்தி நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தான நாள் 2021&ஆம் ஆண்டு செப்டம்பர் 16. ஆனால், அதற்கு முன்பாக 2020&ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1070 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை கொள்முதல் செய்ய இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்தி ஒப்பந்தப் புள்ளிகளைக் கோரியது. அதில் அல் ஜொமையா எனர்ஜி என்ற சவுதி அரேபிய நிறுவனம் 200 மெகாவாட் மின்சாரத்தையும், கிரீன் இன்ஃரா விண்ட் எனர்ஜி நிறுவனம் 400 மெகாவாட் மின்சாரத்தையும் ஒரு யூனிட் ரூ.2 என்ற விலைக்கு வழங்க ஒப்பந்தம் பெற்றன. மத்திய அரசு நிறுவனமான என்.டி.பி.சி எனப்படும் இந்திய அனல்மின் கழகம் ஒரு யூனிட் ரூ.2.01 என்ற விலைக்கு 470 மெகாவாட் மின்சாரம் வழங்க ஒப்பந்தம் பெற்றது. இதற்கான ஆதாரங்கள் இணையத்தில் உள்ளன.
பொதுவாக சூரிய ஒளி மின்சாரத்தின் விலை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வரும் நிலையில், 2020&ஆம் ஆண்டில் ரூ.2 ஆக இருந்த சூரிய ஒளி மின்சாரத்தின் விலை, 2021&ஆம் ஆண்டில் மேலும் குறைந்திருக்க வேண்டும். மாறாக, 30% அதிகரித்திருக்கிறது. இதன் பின்னணியில் தான் அதானி குழுமத்திற்கும், தமிழ்நாடு மின்வாரியம் உள்ளிட்ட 5 மாநில மின்வாரியங்களுக்கும் பேரம் நடந்திருக்கிறது என புகார்கள் எழுந்துள்ளன.
அதானி குழுமத்திற்கும், 5 மாநில மின்வாரியங்களுக்கும் இடையே நடைபெற்ற பேரங்கள் தொடர்பாக புதிய ஆதாரம் ஒன்றை தி வயர் இணையதளம் வெளியிட்டுள்ளது. அதானி குழும நிறுவனங்கள் வழங்கும் சூரிய ஒளி மின்சாரத்திற்கு இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்தி நிறுவனம் அதிக விலை நிர்ணயித்திருந்த நிலையில், சந்தை விலையை விட அதிகமாக உள்ள அந்த விலைக்கு மின்சாரத்தை வாங்க தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில மின்சார வாரியங்களும் முதலில் தயங்கின. அதானி குழுமத்தின் சார்பில் கையூட்டு பேரம் இறுதி செய்யப்பட்ட பிறகு தான் மின்சாரத்தை வாங்க தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில மின்வாரியங்களும் ஒப்புக் கொண்டன என்று தி வயர் இணைய இதழில் வெளியாகியுள்ள கட்டுரையில் கூறப்பட்டிருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டுக்கு தமிழக அரசு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் அளிக்கும் விளக்கம் என்ன? என கேள்வி எழுப்பி உள்ளார்.
இதையும் படிங்க :
TN Cyclone Fengal: இன்று உருவாகிறது புயல்… நாளை மதியம் வரை வெளியே வரவேண்டாம்… இந்த 5 மாவட்ட மக்களுக்கு தனியார் வானிலை ஆய்வாளர் அலர்ட்
தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் ஊழல் நடைபெறும் துறைகளில் முதன்மையானது மின்சாரத்துறை தான் எஸ் விமர்சித்த அவர், அதானியிடமிருந்து மின்சாரம் வாங்குவதில் தொடங்கி அனைத்து நிலைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அந்தக் குற்றச்சாட்டுகள் குறித்தும், இந்த அறிக்கையில் எழுப்பப்பட்டுள்ள வினாக்கள் குறித்தும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டான் விளக்கம் அளிக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.