உலகம்
உக்ரைனுக்கு தோல்வி நிச்சயம்.! -அதிபர் ஜெலன்ஸ்கி!

உக்ரைனுக்கு தோல்வி நிச்சயம்.! -அதிபர் ஜெலன்ஸ்கி!
அமெரிக்கா இராணுவ உதவியை நிறுத்தினால் தோல்வி நிச்சயம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் இராணுவ தாக்குதல்களை எதிர்கொள்ளவும் பதிலடி கொடுக்கவும் உக்ரைனுக்கு அமெரிக்கா இராணுவ உதவியை செய்து வருகிறது. இதன்காரணமாகவே ரஷ்யாவை எதிர்த்து உக்ரைனால் இத்தனை நாள்கள் தாக்குப்பிடித்து போராட முடிகிறதென மனம் திறந்து வெளிப்படையாக பேசியுள்ளார் உக்ரைன் அதிபா் வொலோதீா் ஜெலன்ஸ்கி.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமையுடன் ஆயிரம் நாள்கள் கடந்துள்ளதையொட்டி அமெரிக்க செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் ஜெலன்ஸ்கி பேசியதாவது, “அவர்கள்(அமெரிக்கா) இராணுவ உதவியை நிறுத்தினால், நாம் தோல்வியடைவோம் என நினைக்கிறேன்.
நாம் தொடர்ந்து சண்டையிடுவோம். நம்மிடம் நமக்கான தயாரிப்புகள் இருக்கின்றன, ஆனால், போரில் நீடித்திருக்க இது போதாது” என்று பேசியுள்ளார்.
இந்நிலையில், உக்ரைனின் நெடுநாள் கோரிக்கையை ஏற்று, அமெரிக்கா வழங்கியுள்ள ஏவுகணைகளைக் கொண்டு ரஷ்யாவின் தொலைதூரப் பகுதிகளில் தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபா் ஜோ பைடன் அண்மையில் ஒப்புதல் அளித்தாா். இதைத் தொடா்ந்து, தொலைதூர பகுதிகளில் தாக்குதல் நடத்தும் 6 அமெரிக்க தயாரிப்பு பாலிஸ்டிக் ஏவுகணைகளை, ரஷ்யாவின் பிரயான்ஸ்க் பிராந்தியத்தை நோக்கி உக்ரைன் ஏவியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
இந்தத் தாக்குதலை தொடா்ந்து, உக்ரைன் விவகாரத்தில் மேற்கத்திய நாடுகளை பின்வாங்கச் செய்வதற்கு தனது அணு ஆயுதப் பலத்தைப் பயன்படுத்த ரஷ்யா தயாராக இருப்பதை அறிவிக்கும் விதமாக, அணு ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்துவதற்கான திருத்தப்பட்ட புதிய கொள்கையில் அதிபா் புதின் செவ்வாய்க்கிழமை கையொப்பமிட்டாா்.
ரஷ்யாவிடம் உலகிலேயே மிக சக்திவாய்ந்த, அதிக எண்ணிக்கையிலான அணு ஆயுதங்கள் உள்ளன. எனவே, உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ அமைப்பு நாடுகளுக்கும், ரஷ்யாவுக்கும் போா் மூண்டால், அது உலகப் பேரழிவை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.