இந்தியா
Fengal: சென்னையில் 6ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு! என்ன நடக்கும் தெரியுமா?

Fengal: சென்னையில் 6ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு! என்ன நடக்கும் தெரியுமா?
வங்கக் கடலில் இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் புயலாக மாறியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு ஃபெஞ்ஜல் (Fengal) என பெயரிடப்பட்டுள்ளது.
நாகையில் இருந்து 260 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 270 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து 300 கி.மீ. தொலைவிலும் இருக்கும் ஃபெஞ்ஜல் புயல், தற்போது மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்துவருகிறது.
இந்தப் புயல் நாளை பிற்பகல், காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என சொல்லப்பட்டுள்ளது.
புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 70-80 கி.மீ. வேகத்திலும், இடையிடையே மணிக்கு 90 கி.மீ. வேகத்திலும் சூறைக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை உட்பட பல்வேறு துறைமுகங்களிலும் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 6ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கடலூர் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் 7ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
புயல் சமயங்களில் துறைமுகங்களில் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்படும். ஒவ்வொரு கூண்டும் ஒவ்வொரு எச்சரிக்கையை உணர்த்தும்.
அந்தவகையில், தற்போது பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் ஏற்றப்பட்டுள்ள 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு, 60-90 கி.மீ வேகத்தில் காற்று மற்றும் திடீர் காற்றுடன் மழை வாய்ப்பு இருக்கும்.
இதையும் படியுங்கள் :
புயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன? உச்சக்கட்ட எண் எது தெரியுமா? முழு விவரம் இதோ!
சென்னையில் ஏற்றப்பட்டுள்ள 6ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு, துறைமுகத்தின் வலது பக்கமாக புயல் கரையைக் கடக்கும் என்பதை உணர்த்தும். மேலும், துறைமுகம் கடுமையான வானிலைக்கு உள்ளாகும் என்றும் உணர்த்தும்.
கடலூர் மற்றும் புதுச்சேரியில் ஏற்றப்பட்டுள்ள 7ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு, துறைமுகங்கள் வழியாகவோ அல்லது அதற்கு மிக அருகிலோ புயல் கரையைக் கடக்கும் என்பதை உணர்த்தும்.