இந்தியா
Fengal Cyclone: நாளை பொது போக்குவரத்து தற்காலிக நிறுத்தம்.. மக்கள் வெளியே வரவேண்டாம்.. எச்சரிக்கும் அரசு!

Fengal Cyclone: நாளை பொது போக்குவரத்து தற்காலிக நிறுத்தம்.. மக்கள் வெளியே வரவேண்டாம்.. எச்சரிக்கும் அரசு!
வங்கக் கடலில் ஃபெஞ்ஜல் புயல் உருவாகியுள்ளது. இது நாளை பிற்பகல் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, நாளை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை, ஐடி பணியாளர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவது, பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்துவது, பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் உள்ளிட்ட அறிவிப்புகளை அரசு வெளியிட்டுள்ளது.
பெஞ்சல் (FENGAL) புயல் 30.11.2024 அன்று கரையை கடக்கும் போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு. கடலூர், விழுப்புரம். மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அதிகனமழையுடன் 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு. தேர்வு போன்ற எந்த நிகழ்வுகளும் நடத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட இதர மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தேவைக்கேற்ப முடிவெடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை நாளை (30.11.2024) வீட்டில் இருந்து பணிபுரிய (Work from Home) அறிவுறுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது.
30.11.2024 அன்று பிற்பகல் புயல் கரையை கடக்கும் போது கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் ஓ.எம்.ஆர். சாலையில் பொது போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும்.
30.11.2024 அன்று புயல் கரையைக் கடக்கும் போது கனமழைக்கும், புயல் காற்றுக்கும் வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசியத் தேவை தவிர இதர பணிகளுக்காக வெளியில் வருவதைத் கண்டிப்பாக தவிர்த்து பாதுகாப்பாக வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
குறிப்பாக கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்கள், கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொள்கிறது. மேலும், அரசின் அனைத்து பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு நல்க பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.