இந்தியா
ஃபெஞ்சல் புயல்… இதுவரை 3 பேர் உயிரிழப்பு : கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

ஃபெஞ்சல் புயல்… இதுவரை 3 பேர் உயிரிழப்பு : கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்
சென்னையில் மின்சாரம் தாக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகை வழங்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஃபெஞ்சல் புயல் மரக்காணம் அருகே புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளதால் காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் நடந்து வரும் மீட்பு பணிகள் குறித்து பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் இன்று இரவு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், ”சென்னையில் இரவு 8 மணி நிலவரப்படி 381 இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.
144 நிவாரண மையங்களில் 4904 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன
சென்னையில் மழை நீர் தேங்கியுள்ள 7 சுரங்கப் பாதைகளில் இன்றிரவுக்குள் தண்ணீர் அகற்றப்பட்டு, போக்குவரத்து சீராகும்.
சென்னையில் மின்சாரம் தாக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகை வழங்கப்படும்.
மரக்காணத்தில் 22 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. முந்தைய புயல்களைப் போல் இந்த புயலால் பெரிய பாதிப்புகள் இல்லை.
சென்னையில் மழைப்பொழிவு குறைந்துவருகிறது. எனினும், தொடர்ந்து நிவாரணப் பணிகள் நடைபெறும்.
மழையின் தாக்கம் குறையும் வரை சென்னையில் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு வழங்கப்படும்.
அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு இதுவரை 2,648 புகார்கள் வந்துள்ளன. இதில் 2000க்கும் மேற்பட்ட புகார்கள் தீர்வு காணப்பட்டது.
சென்னை வானிலை ஆய்வு மையம் சரியான முறையில் சிறப்பாக செயல்பட்டுள்ளது.
புயல் கரையைக் கடக்கத் தொடங்கியதும் உரிய தகவல்களை எங்களுக்கு வானிலை மையம் கொடுத்தது” என கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.