இந்தியா
கரையை கடக்கத் தொடங்கிய ஃபெஞ்சல்: சென்னையில் பலத்த காற்று!

கரையை கடக்கத் தொடங்கிய ஃபெஞ்சல்: சென்னையில் பலத்த காற்று!
வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கத் தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுபெற்றது. இதன் காரணமாக இன்றும் நாளையும் கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் அதிகனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
தற்போது புயல் கரையை கடக்கத் தொடங்கியுள்ளதால் சென்னை, புதுச்சேரி பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது.
“ஃபெங்கல்” புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கிமீ வேகத்தில் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
தற்போது மகாபலிபுரத்திலிருந்து 50 கி.மீ தென்-தென்கிழக்கே, புதுச்சேரியிலிருந்து 60 கி.மீ கிழக்கு-வடகிழக்கே மற்றும் சென்னைக்கு தெற்கே 90 கி.மீ. தொலைவில் உள்ளது.
புயல் கரையை கடக்க தொடங்கியிருக்கும் நிலையில் மணிக்கு 70-80 கிமீ வேகத்தில், இடையிடையே 90 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
இது மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு-புதுச்சேரி – காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் அடுத்த 3 முதல் 4 மணி நேரத்தில் கரையை கடக்க வாய்ப்புள்ளது” என்று கூறியுள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.