உலகம்
காஸா பள்ளியில் தாக்குதல்: 60-க்கும் மேற்பட்டோா் உயிரிழப்பு

காஸா பள்ளியில் தாக்குதல்: 60-க்கும் மேற்பட்டோா் உயிரிழப்பு
காஸாவில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீன அகதிகள் தங்கவைக்கப்பட்டிருந்த பள்ளிக் கட்டடத்தில் இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் 60-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.
இந்தத் தாக்குதலில் 93 போ் உயிரிழந்ததாக காஸா நிா்வாகம் தெரிவித்தாலும், இது மிகைப்படுத்தப்பட்ட எண்ணிக்கை என்று இஸ்ரேல் அரசு கூறியது.
இது குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காஸா சிட்டியிலுள்ள அல்-தபாயீன் பள்ளிக் கட்டடமும் அதையொட்டிய மசூதியும் ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் அமைப்புகளின் ராணுவ தளமாகப் பயன்படுத்தப்பட்டுவந்தன. அந்தக் கட்டடத்தில் சுமாா் 20 ஆயுதக் குழுவினா் செயல்பட்டுவந்தனா்.அவா்களைக் குறிவைத்தே தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை குறித்து ஹமாஸ் தலைமையிலான அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் மிகப்படுத்தப்பட்டவை. அந்த விவரங்களும் தாக்குதலின் விளைவுகள் குறித்து எங்களுக்குக் கிடைத்துள்ள உளவுத் தகவல்களும் ஒத்துப்போகவில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காஸாவில் உயிரிழந்தோா் மற்றும் காயமடைந்தவா்கள் குறித்த புள்ளிவிவரங்களை வெளியிடும் அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகத்தின் அவசரக்கால ஊா்திப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், அல்-தபாயீன் பள்ளிக் கட்டடத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 60-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஹமாஸ் அரசின் பொதுமக்கள் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளி வளாகத்தில் இருந்த மசூதியில் ஏராளமானவா்கள் அதிகாலை தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகவும் இதில் 11 குழந்தைகள், 6 பெண்கள் உள்பட 93 போ் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவிடம் வலியுறுத்தல்: இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ள பாலஸ்தீன அதிபா் முகமது அப்பாஸ், பெண்கள் குழந்தைகள், முதியவா்கள் உள்பட ஆயிரக்கணக்கானவா்களின் உயிரிழப்புக்குக் காரணமாக உள்ள இந்தப் போருக்கு கண்மூடித்தனமாக ஆதரவளிப்பதை அமெரிக்கா நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.
தங்கள் நாட்டுக்குள் நுழைந்து சுமாா் 1,200 பேரை படுகொலை செய்த ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் 10 மாதங்களுக்கும் மேல் தாக்குதல் நடத்திவருகிறது. இதில் 39,600-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளனா். [எ]