உலகம்
கிரீஸ்: காட்டுத்தீயால் பெரும் பாதிப்பு – வீடுகளைவிட்டு வெளியேறும் மக்கள்!

கிரீஸ்: காட்டுத்தீயால் பெரும் பாதிப்பு – வீடுகளைவிட்டு வெளியேறும் மக்கள்!
கீரிஸ் நாட்டில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
தலைநகர் ஏதென்ஸ் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டுத்தீயால் வெப்பம் அதிகரித்து வருவதே இதற்கான காரணம்.
கிரீஸ் நாட்டை பொருத்தவரை, கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்கள், கிரீஸ் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பம் அதிகமாக பதிவான காலமாக மாறியுள்ளது. இதனையடுத்து அவ்வப்போது தீ விபத்துகளும் தொடர்ந்து நிகழ்ந்ததும் குறிப்பிடத்தக்கது.
அதன் தாக்கம் ஆகஸ்ட் மாதமும் தொடருவதை அந்நாட்டு மகக்ள் உணர்கின்றனர். இந்த நிலையில், அங்கு 40 டிகிரி செல்சியஸ் (104 டிகிரி ஃபாரன்ஹீட்) வரை வெப்பம் பதிவாகக் கூடுமென அந்நாட்டின் காலநிலை விவகாரம் மற்றும் குடிமக்கள் பாதுகாப்புத் துறை அமைச்சர் வேசில்ஸ் கிகிலியாஸ் இந்த வார தொடக்கத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
கடும் வெப்பம் வாட்டி வதைக்கும் நிலையில், ஏதென்ஸ் சுற்றுவட்டார மலைப் பகுதிகளில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. சுமார் 82 அடி உயரத்துக்கு தீ கொளுந்துவிட்டு எரிவதையும், இரவில் மின்னல் போல தீப்பிழம்புகள் காட்சியளிப்பதாகவும் நேரில் பார்ப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், தீயைக் கட்டுக்குள் கொண்டுவர நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் இரவு பகலாக போராடி வருகின்றனர். பலத்த கற்று வீசி வருவதால் தீ வேகமாக பரவி வருவதாகவும், 27 தீயணைப்புக் குழுக்களைச் சேர்ந்த சுமார் 670 வீரர்களுடன், 80க்கும் மேற்பட்ட ராணுவத்தினரும் கடந்த 20 மணி நேரத்துக்கும் மேலாக தீயணைப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக 180 தீயணைப்பு வாகனங்களும், 30 ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்படுகின்றன.
மலைப் பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால் அப்பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று தீயை அணைப்பது கடுஞ்சவாலாக இருப்பதாக அமைச்சர் வேசில்ஸ் கிகிலியாஸ் தெரிவித்துள்ளார். காட்டுத்தீயால் வெளியேறி வரும் புகையை சுவாசிப்பதால் பலருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏதென்ஸ் நகரையொட்டியுள்ள கடற்கரைப் பகுதியான மட்டியில்,கடந்த 2018-ஆம் ஆண்டு ஏற்பட்ட காட்டுத்தீ விபத்தில் 104 பேர் உயிரிழந்த சம்பவம் போல மீண்டும் அசம்பாவிதஙக்ள் நிகழாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதன் ஒரு பகுதியாக, தலைநகர் ஏதென்ஸ் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்கள் மருத்துவமனைகளை விட்டு வெளியேறுமாறு திங்கள்கிழமை உத்தரவிட்டனர். மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தீக்காய பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்க ஏதென்ஸ் நகரில் 3 மருத்துவமனைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் வெப்பத்தால் ஞாயிற்றுக்கிழமை இரவு முதலே மக்கள் நிவாரண முகாம்களுக்கு செல்ல தொடங்கிவிட்டனர். [எ]