உலகம்
சவூதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 22,000 பேர் கைது

சவூதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 22,000 பேர் கைது
சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த தொழிலாளர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சவூதி அரேபிய பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பில் இவர்கள் கைதாகினர். சுமார் 22,000 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக சவூதி அரேபியாவின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
குடியிருப்புச் சட்டங்களை மீறியமையும் தொடர்பில் 13,186 பேரும், எல்லைப் பாதுகாப்புச் சட்டங்களை மீறியதற்காக 5,427 பேரும், தொழில் சட்டங்களுக்கு உட்படாத 3,358 பேருமே,கைது செய்யப்பட்டதாக சவூதியின் உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இவர்களில் 34 வீதமானோர் யெமென் நாட்டைச் சேர்ந்தவர்கள் , 64 வீதமானோர் எத்தியோப்பியர்கள். 2 வீதமானோர் இதர நாடுகளைச் சேர்ந்தவர்கள் என அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.சட்ட விதிகளை மீறிய வகையில், போக்குவரத்து மற்றும் தங்குமிடங்களை வழங்கியவர்கள் என்ற குற்றச்சாட்டில் 18 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சட்டவிரோதமாக சவூதி அரேபியாவில் பிரவேசிப்பதற்கு வசதி செய்தல் , அவ்வாறானவர்களை அந்நாட்டின் எல்லைக்கு கொண்டு வருதல் , அவர்களுக்கு தங்குமிடம் அல்லது பிற உதவி மற்றும் சேவையை வழங்கும் எந்தவொரு நபருக்கும் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என சவூதிஅரேபியா அறிவித்துள்ளது.