உலகம்
10 கோடி பயணிகள்: பிரமாண்ட விமான நிலையத்தை உருவாக்கும் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ்!

10 கோடி பயணிகள்: பிரமாண்ட விமான நிலையத்தை உருவாக்கும் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ்!
எத்தியோப்பியாவின் தன்னிகரற்ற எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் மற்றும் சர்வதேச ஆலோசனை நிறுவனமான தார் அல்-ஹண்டாசா இணைந்து எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவுக்கு கிழக்கே 42 கி.மீ தொலைவில் உள்ள பிஷோஃப்டு நகருக்கு அருகில் அமையவுள்ள புதிய விமான நிலையத்தின் வடிவமைப்பு மற்றும் மேற்பார்வைக்கான ஒப்பந்தத்தில் இன்று (ஆக. 11) கையெழுத்திட்டன.
புதிய விமான நிலையம் ஆண்டுக்கு 10 கோடி பயணிகளைக் கையாளும் வகையில் கட்டப்படவுள்ளது. மேலும், 270 விமானங்களுக்கு புதிய நிறுத்துமிடத்தை வழங்கும் திறன் படைத்ததாக இருக்கும் என்றார் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மெஸ்பின் தாசேவ்.
நான்கு ஓடுபாதை உடன் புதிய விமான நிலையம் 2029ஆம் ஆண்டில் கட்டுமானம் நிறைவடையும் போது, ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய விமான நிலையமாக இது இருக்கும் என்று செய்தியாளர்களிடம் மெஸ்பின் தாசேவ் தெரிவித்தார். ஒரு மெகா விமான நிலைய திட்டத்தை மேற்கொள்வதன் மூலம், விமான நிறுவனம் அதன் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை படைக்க உள்ளது.
தற்போது ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய விமான நிறுவனத்தின் முக்கிய மையமாக இருக்கும் அடிஸ் அபாபா போலே சர்வதேச விமான நிலையம், விரைவில் ஆண்டுக்கு 2.5 கோடி பயணிகளுக்கு சேவை செய்யும் திறனை எட்டும் என்றார் அதன் தலைமை நிர்வாக அதிகாரி.
இந்த புதிய மெகா விமான நிலையம் ஐந்தாண்டு திட்டமாகும். இது 2029ல் இறுதி செய்யப்படும். இது இரண்டு கட்டங்களைக் கொண்டிருக்கும். இரண்டு ஓடுபாதைகளுடன் முதல் கட்டம் முடிந்ததும், விமான நிலையம் ஆண்டுக்கு 6 கோடி பயணிகளைக் கையாளும் திறனைக் கொண்டிருக்கும் என்றார் தசேவ்.
முதல் கட்டத்திற்கு மட்டும் விமான நிறுவனத்திற்கு குறைந்தபட்சம் 6 பில்லியன் டாலர் செலவாகும் என்ற நிலையில், மேலும் பணம் வழங்க ஆர்வம் காட்டும் மற்ற நிறுவனங்களின் மூலம் கடனாக பெறப்படும் என்றார்.
மொத்தம் 35 சதுர கி.மீ பரப்பளவில் கட்டப்படவுள்ள புதிய விமான நிலையத்தில் ஷாப்பிங் மால் மற்றும் ஹோட்டல் வசதிகளுடன் அமையும். இந்த திட்ட வடிவமைப்பு முடிந்ததும், மெகா விமான நிலையத்தின் கட்டுமானம் திட்டத்துக்கு டெண்டர் விடப்படும். [எ]