இந்தியா
Fengal Cyclone: ஃபெஞ்சல் புயல் எப்போது கரையை கடக்கும்? – வானிலை மையம் புது அப்டேட்!

Fengal Cyclone: ஃபெஞ்சல் புயல் எப்போது கரையை கடக்கும்? – வானிலை மையம் புது அப்டேட்!
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பாலசந்திரன், “தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் தற்போது புதுவைக்கு வடகிழக்கே சுமார் 100 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 100 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. மேலும் தற்போது ஃபெஞ்சல் புயல் 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்று மாலை காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் புயல் கரையை கடக்கக்கூடும்.
அடுத்த 24 மணிநேரத்துக்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், பெரம்பலூர், மயிலாடுதுறை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.
நாளை கடலூர், புதுவை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழைக்கும், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.
இதற்கிடையே, இன்று புயல் கரையை கடக்கும்போது திருவள்ளூர் தொடங்கி மயிலாடுதுறை வரையிலான வடகடலோர மாவட்டங்களில் மணிக்கு 70 – 80 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 90 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.
வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 50 – 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். புயல் கரைக்கு அருகே வரும்போது அதனின் நகர்வு வேகம் சற்று குறைய வாய்ப்பு உண்டு.” என்று கூறினார்.