இந்தியா
Fengal Cyclone: மிரட்டும் ஃபெஞ்சல் புயல்… 7 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட்

Fengal Cyclone: மிரட்டும் ஃபெஞ்சல் புயல்… 7 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட்
வங்கக் கடலில் இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் புயலாக மாறியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு ‘ஃபெஞ்ஜல்’ (Fengal) என பெயரிடப்பட்டுள்ளது.
நாகையில் இருந்து 260 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 270 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து 300 கி.மீ. தொலைவிலும் இருக்கும் ‘ஃபெஞ்ஜல்’ புயல், தற்போது மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்துவருகிறது.
இந்தப் புயல் இன்று (நவம்பர் 30) பிற்பகல், காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என சொல்லப்பட்டுள்ளது.
புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 70-80 கி.மீ. வேகத்திலும், இடையிடையே மணிக்கு 90 கி.மீ. வேகத்திலும் சூறைக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தப் புயலின் காரணமாக சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி, கடலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறைமுகத்திலும், ஒவ்வொரு எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இன்று (30ம் தேதி) தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும், ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழையும் ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (30ம் தேதி) அதி கன மழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.