விளையாட்டு
IND vs AUS 2nd Test : ஆஸி. முக்கிய வீரர் விலகல்… இந்தியா வெல்ல வாய்ப்பு!

IND vs AUS 2nd Test : ஆஸி. முக்கிய வீரர் விலகல்… இந்தியா வெல்ல வாய்ப்பு!
உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் இறுதிப்போட்டியில் நுழைவதற்கு 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியில் உள்ளது இந்திய அணி.
அதன்படி கடந்த 22ஆம் தேதி பெர்த் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா தலைமையில் களமிறங்கிய இந்திய அணி, 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதனையடுத்து வரும் டிசம்பர் 6ஆம் தேதி அடிலெய்டில் இரண்டாவது டெஸ்ட் பகலிரவு போட்டியாக நடைபெற உள்ளது.
இதற்கிடையே ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணியுடனான 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் மோதுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நேற்று கான்பெரா வந்தது.
அங்கு இரு அணி வீரர்களும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்திய வீரர் ஒவ்வொருவரையும் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
அப்போது பெர்த் போட்டியில் சிறப்பாக விளையாடிய பும்ரா மற்றும் விராட்கோலியை வாழ்த்தினார்.
இந்த நிலையில் கான்பெராவில் இன்று பகலிரவு ஆட்டமாக தொடங்க இருந்த பயிற்சி போட்டியின் முதல் நாள் மழை காரணமாக முற்றிலும் கைவிடப்பட்டது.
இதனையடுத்து நாளை நடைபெற உள்ள இரண்டாவது நாள் ஆட்டம் 50 ஓவர் போட்டியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து ஆஸ்திரேலியாவின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த ஜோஷ் ஹேசில்வுட் விலகியுள்ளார்.
முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியிருந்த நிலையில், அவரது விலகல் இந்திய அணியின் வெற்றிக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.