இலங்கை
சட்டவிரோத மரக்குற்றி களஞ்சியம்; அத்தியட்சகர் கைது

சட்டவிரோத மரக்குற்றி களஞ்சியம்; அத்தியட்சகர் கைது
மன்னார் சிலாவத்துறை பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமான முறையில் மரக்குற்றி களஞ்சியம் ஒன்றை நடாத்தி வந்த சந்தேகத்தின் பேரில் கயுவத்தைக்கு பொறுப்பான அத்தியட்சகர் ஒருவர் 1820 மரத் துண்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மன்னார் சிலாவத்துறை பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்ட கயுவத்தை பகுதியில் அனுமதி பத்திரமின்றி மரச்சாலை இயங்கி வருவதாக பொலிசாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து பொலிசார் அவ் இடத்தை கைப்பற்றியுள்ளனர்.
மன்னார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஏ.எஸ்.சந்திரபாலவின் பணிப்புரைக்கமைய மன்னார் மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகளால் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியான பொ.பா.சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ், பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பொ.சா 36501 ரத்ணமனல இ 74927 குணசிங்க பொ.கொ37662 கருணாசிங்க , 37883 பிரேமரத்ன , 66638 ரத்னாயக்க , 83790 விமுர்த்தி 90464 திசாநாயக்க, 313999 சுபிதரன் ஆகியோரால் இவ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இக் களஞ்சியத்தில் பெருந்தொகையான முதிரை, பாலை மற்றும் பல்வேறு மரக்குற்றிகள் பலகைகள் சுமார் 1820 வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதுடன் இது தொடர்பாக கயுவத்தைக்கு பொறுப்பான அத்தியட்சகர் ஒருவரே நடாத்தி வந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட வழக்கு பொருட்களும் கைதான சந்தேக நபரும் மேலதிக நடவடிக்கைக்காக சிலாவத்துறை பொலிஸில் ஒப்படைக்கபட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.