இலங்கை
சிந்துஜா வழக்கில் பொலிஸார் அசமந்தம் – நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!

சிந்துஜா வழக்கில் பொலிஸார் அசமந்தம் – நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!
மன்னார் மருத்துவமனையில் இரத்தப்போக்குக் காரணமாகச் சேர்க்கப்பட்ட மன்னார், கட்டையம்பனைச் சேர்ந்த இளம் தாய் சிந்துஜாவின் மரணம் தொடர்பான விசாரணைளைத் துரிதப்படுத்துமாறு மன்னார் நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
இளம்தாய் சிந்துஜா இரத்தப்போக்குக் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தநிலையில் உயிரிந்தார். அவரின் உயிரிழப்புக்கு மருத்துவமனைத் தரப்பின் அசமந்தப் போக்கே காரணம் என்று உறவினர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
இதுதொடர்பாக உறவினர்கள் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இந்தநிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று மன்னார் நீதவான் நீதிமன்றில் அழைக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் பொலிஸாரின் விசாரணைகள் மந்தகதியில் இருப்பதை பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர்.
நீதிமன்றில் முன்னிலையான பொலிஸார், சில நாள்களுக்கு முன்னரே இந்த வழக்கு மன்னார் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
இதுவரைகாலமும் மன்னார் மடு பொலிஸாரே இந்த முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தனர் என்றும், முறைப்பாட்டை “பி” வழக்காகப் பதிவு செய்யாது சாதாரண வழக்காகப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி டெனிஸ்வரன் மற்றும் சர்மிலன் டயசின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், விசாரணைகளைத் துரிதப்படுத்தி இரு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப் பொலிஸாருக்கு உத்தரவிட்டது.
வழக்கை “பி” அறிக்கை தாக்கல் செய்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்ட நீதிமன்றம், எதிர்வரும் டிசெம்பர் மாதம் 3ஆம் திகதிக்கு வழக்கைத் தவணையிட்டது.