இலங்கை
பிரசவத்தின் போது உயிரிழந்த தாயும், சேயும் யாழ் மருத்துவமனைக்கு

பிரசவத்தின் போது உயிரிழந்த தாயும், சேயும் யாழ் மருத்துவமனைக்கு
மன்னார் பொது மருத்துவமனையில் நேற்றைய தினம் (19) பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட நிலையில் மரணமடைந்த இளம் தாய் மற்றும் சேயின் சடலங்கள் மேலதிக பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (19) இரவு கொண்டுவரப்பட்டுள்ளன.
மன்னார் பட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்த 28 வயதான இளம் தாய் வேணுஜா என அழைக்கப்படும் ஜெகன் ராஜ சிறி, திருமணமாகி 10 வருடங்கள் குழந்தை இல்லாத நிலையில் நேற்றைய தினம் (19) பிரசவத்திற்காக மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையின் மகப்பேற்று விடுதியில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சையின் போது, தாயும் சேயும் மரணமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் உறவினர்கள், பெற்றோர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒன்றிணைந்து மகப்பேற்று விடுதியில் போராட்டம் நடத்திய நிலையில் மருத்துவமனையில் பதட்டமான நிலை ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் நீதிவான், இறந்த தாய் மற்றும் சேயின் சடலங்களை பிரதே பரிசோதனைக்காகவும் மேலதிக விசாரணைகளுக்காவும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார்.
நீதிவானின் உத்தரவுக்கு அமைய சடலங்கள் யாழ்ப்பாண போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.