வணிகம்
தகதகன்னு மின்னும் கோல்ட் ஃபாயில் காலண்டர்… வருஷம் முடிஞ்சாலும் இதுக்கு மவுசு குறையாது…

தகதகன்னு மின்னும் கோல்ட் ஃபாயில் காலண்டர்… வருஷம் முடிஞ்சாலும் இதுக்கு மவுசு குறையாது…
தகதகன்னு மின்னும் கோல்ட் ஃபாயில் காலண்டர்… வருஷம் முடிஞ்சாலும் இதுக்கு மவுசு குறையாது…
புத்தாண்டு வரவுள்ளதை அடுத்து புத்தாண்டுக்கு காலண்டர்கள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. காலண்டர் என்பது வெறும் நாட்காட்டியாக இல்லாமல், அலுவலகங்களிலும் பல இடங்களிலும் அலங்காரப் பொருளாகவே இருந்து வருகிறது.
அதனால் தான் வாடிக்கையாளர்களைக் கவர விதவிதமாகத் தெய்வ புகைப்படங்கள், அரசியல் தலைவர்கள் புகைப்படங்கள் போன்றவற்றை முகப்பில் அச்சிட்டு வருகின்றனர் உற்பத்தியாளர்கள். அந்த வகையில் வாடிக்கையாளர்களைக் கவர உற்பத்தியாளர்கள் கையில் எடுத்த காலண்டர் தான் ‘‘கோல்டு பாயில்’’.
பார்க்க தங்கம் போல் ஜொலிக்கும் இந்த வகை காலண்டர்கள் சமீபத்திய ஆண்டுகளாகவே மக்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. தங்கம் போல் ஜொலிக்கும் காரணத்தால் ‘‘கோல்டு பாயில்’’ எனப்படுகிறது. மற்ற காலண்டர்களை விட இதன் விலையும் சற்று அதிகம். பார்க்க போட்டோ பிரேம் போல இருக்கும் இந்த காலண்டர்களை வாடிக்கையாளர்கள் வாங்கி பயன்படுத்த அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோல்டு சீட்டுகள் மீது லேமினேஷன் செய்து பிரேம்கள் பொருத்தி போட்டோ பிரேமாக செய்து, ‘‘கோல்டு பாயில்’’ காலண்டராக தயார் செய்து வருகின்றனர்.
இது பற்றி ‘‘கோல்டு பாயில்’’ காலண்டர் தயார் செய்து வரும் ஷேக் அமீன் கூறுகையில், “பொதுவாக காலண்டரை சாதாரண பொதுமக்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக வாங்குவதை விட, நிறுவனங்கள் தங்களை விளம்பரப்படுத்த வாங்கி அதை விநியோகம் செய்து தங்களை விளம்பரப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் கவரும் வகையில் உள்ள ‘‘கோல்டு பாயில்’’ காலண்டர்களில் நிறுவனப் பெயரை அச்சிட்டு கொடுக்கும் போது நிறுவனத்தின் மதிப்பை உயர்த்தி காட்டும் என்பதால் நிறுவனங்கள் இதை வாங்க விருப்பம் காட்டுகின்றன. மேலும், இந்த வகை காலண்டர்களின் பின்புறத்தில் பஞ்சாங்கம் இருக்காது, அதனாலேயே ஒவ்வொரு வருடமும் கீழே உள்ள நாட்காட்டியை மட்டும் மாற்றி தொடர்ந்து பயன்படுத்தலாம்” எனத் தெரிவித்தார்.