இந்தியா
பாதியில் நிற்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்.. 6 ரயில்கள் ரத்து.. மழை வெள்ளத்தால் தெற்கு ரயில்வே அறிவிப்பு!

பாதியில் நிற்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்.. 6 ரயில்கள் ரத்து.. மழை வெள்ளத்தால் தெற்கு ரயில்வே அறிவிப்பு!
வங்கக்கடலில் நிலவிய “ஃபெஞ்சல்” புயல், மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து, புதுச்சேரி அருகில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணி முதல் 11.30 மணி வரையிலான காலத்தில் கரையைக் கடந்தது. இந்நிலையில், நேற்று (டிச.1) காலை 11.30 மணியளவில் ஃபெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதன்காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. இதில் விக்கிரவாண்டி பகுதியில் பெய்த கனமழையால், விக்கிரவாண்டி – விழுப்புரம் இடையே தண்டவாளத்தின் குறுக்கே தண்ணீர் செல்கிறது. ரயில் பாலத்தை வெள்ளநீர் சூழ்ந்து தண்டவாளத்தின் குறுக்கே செல்வதால் 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்லும் வந்தே பாரத் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி – சென்னை வந்தே பாரத் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரை – சென்னை வைகை விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
காரைக்குடி – சென்னை பல்லவன் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை – மதுரை தேஜஸ் விரைவு ரயில், சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகிய 6 ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இதன்காரணமாக மதுரையில் இருந்து நேற்றிரவு புறப்பட்ட பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் உட்பட சென்னை நோக்கி வரும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.