இலங்கை
முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அமரர் ஆர். சம்பந்தனின் இல்லம் அரசாங்கத்திடம் மீள கையளிப்பு!

முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அமரர் ஆர். சம்பந்தனின் இல்லம் அரசாங்கத்திடம் மீள கையளிப்பு!
முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அமரர் ஆர். சம்பந்தனுக்கு, கொழும்பு 7இல் அரசாங்கத்தால் வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ இல்லம் அரசாங்கத்திடம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமரர் ஆர். சம்பந்தன் உயிரிழந்து ஐந்து மாதங்களின் பின்னரே, அவரது மகள் மூலம் குறித்த உத்தியோகபூர்வ இல்லம் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ இல்லங்களை மீள ஒப்படைக்குமாறு பலமுறை ஞாபகமூட்டல்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில் அமரர். ஆர். சம்பந்தனுக்கு கொழும்பு 7இல் மலலசேகர வீதியில் கடந்த 2015ஆம் ஆண்டில் வழங்கப்பட்டிருந்த குறித்த உத்தியோகபூர்வ இல்லமானது மீள அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நல்லாட்சி காலத்தில் முன்னாள் அமைச்சர் கயந்த கருணாதிலக மூலம் 2019ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி முன்னிலைப்படுத்தப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தின்படி, அமரர். சம்பந்தனுக்கு குறித்த உத்தியோகபூர்வ இல்லத்தை அவர் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக பதவி வகிக்கும் வரையில் பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லம் சுமார் ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள நிலையில் அதன் பராமரிப்பு பணிகள் அனைத்தும் கடந்த காலத்தில் அரசாங்கத்தினாலேயே மேற்கொள்ளப்பட்டது.
குறித்த உத்தியோகபூர்வ இல்லம் கடந்த 12ஆம் திகதி அரசாங்கத்திடம் கையளிக்கப்படும் என அமரர் இரா.சம்பந்தனின் மகள் எழுத்து மூலம் அமைச்சுக்கு அறிவித்திருந்த போதிலும் அன்றைய தினம் அது கையளிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. (ச)