இந்தியா
“புயல் பாதிப்பை மதிப்பீடு செய்ய மத்திய குழுவை அனுப்புங்கள்” – பிரதமரிடம் தொலைபேசியில் பேசிய முதல்வர்!

“புயல் பாதிப்பை மதிப்பீடு செய்ய மத்திய குழுவை அனுப்புங்கள்” – பிரதமரிடம் தொலைபேசியில் பேசிய முதல்வர்!
பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஃபெஞ்சல் புயலின் காரணமாக தமிழ்நாட்டின், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பொழிவு இருந்தது. இதில், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. இதனால், இந்த மாவட்டங்களில் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக, விழுப்புரம் மாவட்டமும், கடலூர் மாவட்டமும் கடும் சேதத்தைச் சந்தித்தது. மழை வெள்ள சேதம் குறித்து ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மழைவிட்டு மூன்று நாட்களில் பாதிப்பு கணக்கீடு செய்யப்பட்டு இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கு மொத்தம் ரூ. 2000 கோடி நிவாரணம் வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், “ஃபெஞ்சல் புயல் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக என்னைத் தொடர்புகொண்டு கேட்டறிந்தார்.
மாநில அரசு பேரிடர் பாதிப்பைத் திறம்பட எதிர்கொண்டு வருவதையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதையும் பிரதமரிடம் தெரிவித்து, தமிழ்நாட்டு மக்களைக் கடும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ள இந்தப் புயலின் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கி, புயல் சேதங்கள் குறித்த விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள ஒன்றியக் குழுவை அனுப்பிட வேண்டும் என்ற எனது கடிதத்தைக் குறிப்பிட்டு, இது குறித்து மீண்டும் வலியுறுத்தினேன்.
தமிழ்நாட்டின் இந்தக் கோரிக்கையை பிரதமர் உடனடியாகப் பரிசீலித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று உறுதிபட நம்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.