வணிகம்
Karthigai Deepam: கலர்கலரா கலைநயம் பொங்கும் விளக்குகள்… கார்த்திகைக்கு களைகட்டும் விற்பனை…

Karthigai Deepam: கலர்கலரா கலைநயம் பொங்கும் விளக்குகள்… கார்த்திகைக்கு களைகட்டும் விற்பனை…
கலர்கலரா கலைநயம் பொங்கும் விளக்குகள்… கார்த்திகைக்கு களைகட்டும் விற்பனை…
திருக்கார்த்திகையையொட்டி குமரி மாவட்டத்தில் புது புது வடிவங்களில் அகல் விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன. அவற்றைப் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கிறார்கள்.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான திருக்கார்த்திகை வரும் 13ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது வழக்கம். குறிப்பாக 27 நட்சத்திரங்களைக் குறிக்கும் வகையில் 27 தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்வார்கள்.
கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி குமரி மாவட்டத்தில் அகல்விளக்குகள் விற்பனை தொடங்கியுள்ளது. நாகர்கோவில் அருகே உள்ள சுங்கான் கடை பகுதியில் சாலையோரம் அகல்விளக்குகள் உட்பட விதவிதமான விளக்குகள் விற்பனைக்காகக் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு புதுப்புது வடிவங்களில் விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளது. அதாவது பீங்கானால் செய்யப்பட்ட செராமிக் விளக்குகள் அதிக அளவு வந்துள்ளன. மேலும் யானை, லட்சுமி, பிள்ளையார், விலங்குகள் ஆகிய வடிவங்களில் அகல்விளக்குகள் தயார் செய்யப்பட்டு விற்பனைக்காகக் குவிக்கப்பட்டுள்ளது.
இதுபோக களிமண்ணால் செய்யப்பட்ட விளக்குகள், அச்சு விளக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றைப் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இதுகுறித்து நாகர்கோவில் அடுத்த சுங்கான் கடை பகுதியைச் சேர்ந்த மண் மண்பாண்டக் கூட்டுறவுச் சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கூறுகையில், “இந்த ஆண்டு குமரி மாவட்டத்தில் மழை பாதிப்புகள் இருந்தாலும் சீசன் விளக்குகள் வியாபாரம் அமோகமாகத் துவங்கி உள்ளது.
கணபதி விளக்கு, பாவை விளக்கு, மயில் விளக்கு, சிவன் விளக்கு போன்றவை இந்த ஆண்டு வியாபாரத்திற்காக வைக்கப்பட்டுள்ளது. சாலையோரம் வைக்கப்பட்டு இருக்கக்கூடிய விளக்குகளைப் பொதுமக்கள் சுற்றுலாப் பயணிகள் என அனைவரும் வந்து விரும்பி வாங்கி செல்கின்றனர். மேலும், இது திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை என்பதால் இங்கிருந்து திருவனந்தபுரத்திற்கும் விளக்குகள் வாங்கி செல்லப்படுகின்றன” எனத் தெரிவித்தனர்.