இந்தியா
Pongal Gift | பொங்கல் பரிசுத்தொகை வழங்குவதில் மாற்றம்? – தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவு

Pongal Gift | பொங்கல் பரிசுத்தொகை வழங்குவதில் மாற்றம்? – தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவு
பொங்கல் பரிசுத் தொகையை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
கும்பகோணத்தைச் சேர்ந்த சுந்தர விமலநாதன், தாக்கல் செய்த மனு நீதிபதிகள் ரமேஷ், மரிய கிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
பொங்கல் பரிசுத் தொகுப்பில் சக்கரைக்குப் பதில் வெல்லம் வழங்க வேண்டும் என்றும், பரிசுத் தொகுப்புடன் வழங்கப்படும் ரூ.1000 ரொக்கத்தை குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டும் மனுதாரர் தரப்பில் இதே கோரிக்கைகளை முன்வைத்து வழக்கு தொடரப்பட்டிருந்தது. அப்போது இந்த கோரிக்கைகள் தொடர்பாக பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பில் சக்கரைக்குப் பதில் வெல்லம் வழங்க நடப்பு ஆண்டே இயலுமா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இல்லையெனில் 2026ஆம் ஆண்டு செயல்படுத்துவது பற்றி அரசு முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
வங்கிக் கணக்கில் பொங்கல் பரிசுத் தொகையை செலுத்துவது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நுகர்பொருள் வாணிபக்கழக கூடுதல் செயலருக்கு உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 19ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.