இந்தியா
Villupuram Flood: “வீடு வீடாக நிவாரணம் பொருட்கள்” – தாமதமின்றி கிடைக்க ஏற்பாடு…

Villupuram Flood: “வீடு வீடாக நிவாரணம் பொருட்கள்” – தாமதமின்றி கிடைக்க ஏற்பாடு…
நிவாரண பொருட்களை ஆய்வு செய்த கூடுதல் தலைமை செயலாளர் ராதா கிருஷ்ணன்
ஃபெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்திற்கு சேலம், திருச்சி, செங்கல்பட்டு, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து நிவாரணப் பொருட்கள் வந்துள்ளது. இதில் அரிசி, மளிகைப் பொருட்கள் தொகுப்பு, குடிநீர், ரஸ்க், பிஸ்கட் பாக்கெட், பிரட் பாக்கெட், பால், பாய், பெட்ஷீட், உள்ளிட்ட பல்வேறு நிவாரணப் பொருட்களை மொத்தமாக சேர்த்து விழுப்புரம் மாவட்டத்தில் பாதிப்பு ஏற்பட்ட பல்வேறு பகுதிகளுக்குப் பிரிக்கப்பட்டு அனுப்பும் பணி ஆரம்பமாகியுள்ளது. இதனை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளத்தால் அதிகமாக அரகண்டநல்லூர், திருவெண்ணைநல்லூர், அரசூர், இருவேலிப்பட்டு, வி.சாத்தனூர், உள்ளிட்ட 240 கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு சில இடங்களில் நிவாரணப் பொருட்களான பால், குடிக்க தண்ணீர் போன்ற எதுவும் கிடைக்கவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டி, பொதுமக்கள் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்க சேலம், திருச்சி, கரூர், நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை போன்ற பல்வேறு மாவட்டங்களிலிருந்து நிவாரணப் பொருட்கள் 15 லாரிகள் மூலமாக கொண்டுவரப்பட்டு, விழுப்புரம் உள் விளையாட்டு அரங்கில் வைக்கப்பட்டுள்ளது. அதனைப் பிரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட மக்கள் தங்கி இருக்கும் முகாமினை ஆய்வு செய்த பின் நம்மிடம் பேசிய கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த் துறை சார்பில் அரிசி மூட்டைகள், பால் பாக்கெட்கள், பெட்ஷீட்கள், பிரட் பாக்கெட், பிஸ்கட் பாக்கெட்டுகள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. நிவாரண பொருட்கள் அனைத்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு வீடாக சென்று வருவாய்த் துறை ஊழியர்கள் வழங்கவுள்ளதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.