இந்தியா
அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு… பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு

அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு… பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு
பெஞ்சல் புயலின் காரணமாக தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. பல்வேறு இடங்களில் மழை வெள்ளம் ஏற்பட்டு, வீட்டின் பொருட்கள், ஆவணங்கள், மாணவர்களின் பாடப்புத்தகங்கள் எல்லாம் கடும் சேதம் அடைந்துள்ளன.
இந்நிலையில், இந்த மாதம் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெறுகிறது. எனவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்படுமா என கேள்வி எழுந்திருந்தது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் உத்தரவின் படி, பெஞ்சல் புயல் மழை வெள்ளத்தால் கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்திற்கொண்டு பள்ளி மாணவர்களின் நலன்கருதி நடைபெறவுள்ள அரையாண்டுத் தேர்வுகளை இம்மாவட்டங்களில் மட்டும் ஒத்தி வைக்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வுகளை 02.01.2025 முதல் 10.01.2025 தேதிக்குள் நடத்திடுமாறு சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளுமாறு மேற்கண்டுள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மழை நீர் வடிந்த பிறகு முறையாக பள்ளி திறக்கும்போது 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளை நடத்திடவும். அனைத்து வகுப்புகளுக்கும் பாடங்கள் ஏதேனும் முடிக்கப்படாமல் இருத்தால் அதனை முடித்திடவும் மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்கான அறிவுரைகளை ஆசிரியர்கள் மூலமாக வழங்கிட தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கிடுமாறு சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இம்மாவட்டங்களுக்கும் அரையாண்டு விடுமுறைக் காலம் 24.12.2024 முதல் 01:01.2025 வரை பொருந்தும் எனத் தெரிவிக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.