இலங்கை
ஈஸ்டர் தொடர்பில் தகவல் உள்ளதெனக் கூறிய கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்!

ஈஸ்டர் தொடர்பில் தகவல் உள்ளதெனக் கூறிய கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்!
உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பில் தன்னிடம் பல தகவல்கள் உள்ளதாக மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் யாருக்கு தொடர்புள்ளது என்பது குறித்து அரசாங்கம் தீவிரவிசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள அவர் ;
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இந்த அரசாங்கத்திற்கு பெரும் பொறுப்புள்ளது பிள்ளையான் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார், இதற்கு அப்பால் நீங்கள் யாரை கைதுசெய்ய வேண்டும் என நாங்கள் உங்களிற்கு தெரிவிக்க வேண்டியதில்லை, இது பொலிஸாரிற்குரிய விடயம், எனினும் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து எங்களிடம் மேலும் பல தகவல்கள் உள்ளன.
நான் பாதுகாப்பு செயலாளரிடம் இது குறித்து தெரிவித்துள்ளேன். பாதுகாப்பு அமைச்சரும் இங்கிருக்கின்றார்…எங்களிற்கு ஒரு வாய்ப்பை தாருங்கள்.
நாங்கள் திரிபோலி பட்டாலியன் குறித்து பல விடயங்களை நாடாளுமன்றத்தில் விவாதித்துள்ளோம்… இதேவேளை ஆதாரங்களை பெறுவதற்கு நாங்கள் முயற்சிப்போம் – என்றார். (ச)