இந்தியா
சாதி மறுப்பு திருமணம் செய்த பெண் கான்ஸ்டேபிள்..! தங்கை என்றும் பாராமல் கொலை செய்த அண்ணன்..

சாதி மறுப்பு திருமணம் செய்த பெண் கான்ஸ்டேபிள்..! தங்கை என்றும் பாராமல் கொலை செய்த அண்ணன்..
தனது மகனோ, மகளோ வேறொரு சமூகத்தை சேர்ந்தவரை காதலித்தால், அவர் இருப்பதை விட இறப்பதே மேல் என்று பல்வேறு படங்களில் தந்தை கதாபாத்திரங்கள் வசனம் பேசுவதை கேட்டிருப்போம். அப்படியொரு சகோதரர், பெண் காவலர் என்றும் பாராமல் தனது தங்கையையே கொலை செய்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள ராயப்போல் கிராமத்தை சேர்ந்தவர் நாகமணி. இவர், ஹைதராபாத் அருகே உள்ள ஹையத் நகர் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்துள்ளார். அப்போது, அதே காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்துள்ளார்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஸ்ரீகாந்தும் – நாகமணியும் காதல் திருமணம் செய்துள்ளனர். வேறு சமூகத்தை சேர்ந்தவரை நாகமணி திருமணம் செய்ததால், தங்களது குடும்ப கௌரவம் சீர்குலைந்து விட்டதாக அவரின் அண்ணன் பரமேஷ் ஆத்திரமடைந்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற பரமேஷ், தனது தங்கை என்றும் பாராமல் நாகமணியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில், ராயப்போல் பகுதியில் ஸ்கூட்டரில் பயணித்துக் கொண்டிருந்த நாகமணியை பின்தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது, நாகமணி சற்றும் எதிர்பார்க்காத நிலையில், திடீரென அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு பரமேஷ் தப்பியோடியதாக கூறப்படுகிறது.
இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த நாகமணி, நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் நாகமணியின் உடலை கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண் காவலர் நாகமணி கொலை செய்யப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தப்பி ஓடிய பரமேஷை பிடித்து, போலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சாதி மறுப்பு திருமணம் செய்தவர் தனது தங்கை என்றும் பாராமல், அவரது அண்ணனே ஆணவக் கொலை செய்த சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.