வணிகம்
RBI New Rule: செயல்படாத வங்கி கணக்குகள்.. ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு.. என்ன தெரியுமா?

RBI New Rule: செயல்படாத வங்கி கணக்குகள்.. ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு.. என்ன தெரியுமா?
செயல்படாத வங்கி கணக்குகள் தொடர்பான ரிசர்வ் வங்கி மேற்பார்வை துறை ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், வங்கி கணக்குகள் செயலற்று போவதற்கும், உரிமை கோரப்படாத டெபாசிட் கணக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும் மற்றும் நீண்ட காலமாக பரிவர்த்தனை நடைபெறாமல் இருப்பது அல்லது குறிப்பிட்ட காலத்திற்குள் கே.ஒய்.சி., தகவல்களை புதுப்பிக்காதது உட்பட பல்வேறு காரணங்கள் தெரியவந்துள்ளன.
இது தொடர்பாக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், சில வங்கிகளில் மொத்த டெபாசிட்டை விட, செயல்படாத கணக்குகள் அல்லது உரிமைக் கோரப்படாத கணக்குகளில் உள்ள டெபாசிட் தொகை அதிகமாக உள்ளது. எனவே, வங்கிகள் உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக, செயல்படாத அல்லது முடக்கப்பட்ட வங்கி கணக்குகளின் எண்ணிக்கையை குறைப்பதுடன், அவற்றை செயல்படும் கணக்குகளாக மாற்ற எளிய நடைமுறையை பின்பற்ற வேண்டும்.
கே.ஓய்.சி. மூலம் தடையற்ற முறையில் புதுப்பிக்க, மொபைல் அல்லது இணைய வங்கி, பிற வங்கி கிளை மற்றும் வீடியோ மூலமாக வாடிக்கையாளரை அடையாளம் காண்பது போன்றவற்றை செயல்படுத்த வேண்டும். அரசுகளால் வழங்கப்படும் நலத்திட்ட பயனாளிகளின் வங்கி கணக்குகள், தகவல்களை புதுப்பிக்கவில்லை எனக்கூறி முடக்கப்படுவதை காண முடிகிறது.
இதுபோன்ற வங்கி கணக்கை தனியாக பிரித்து, அவர்களுக்கு திட்டங்களின் நிதி தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், செயல்படாத அல்லது முடக்கப்பட்ட கணக்குகளை மீண்டும் பயன்படுத்த, சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும். அத்துடன், காலாண்டுக்கு ஒருமுறை, செயல்படாத வங்கி கணக்குகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களை, மூத்த மேற்பார்வை மேலாளருக்கு, வரும் டிசம்பர் காலாண்டு முதல் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.