உலகம்
பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்; தீர்வு கோரும் பாடகி மேரி மில்பென்!

பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்; தீர்வு கோரும் பாடகி மேரி மில்பென்!
பங்களாதேஷில் இஸ்கான் பாதிரியார் சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டதற்கு அமெரிக்க பாடகி மேரி மில்பென் கவலை தெரிவித்தார். நாட்டில் உள்ள “தீவிரவாதிகள்” மூலம் இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக உலக நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
மத சுதந்திரம் மற்றும் உலகளவில் உள்ள அனைத்து மதத்தினர்களின் பாதுகாப்பையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். “சின்மோய் கிருஷ்ண தாஸ் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது மற்றும் பங்களாதேஷில் தீவிரவாதிகளால் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிரான தொடர்ச்சியான தாக்குதல்கள் உலகத் தலைவர்களால் கவனித்தில் கொள்ளப்பட வேண்டும். மத சுதந்திரம் மற்றும் உலகளவில் உள்ள அனைத்து மத நம்பிக்கையாளர்களின் பாதுகாப்பையும் நாம் பாதுகாக்க வேண்டும்” என்று மில்பென் தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பங்களாதேஷின் தேசியக் கொடியை காட்சிப்படுத்தியதாக சின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். அவர் சிட்டகாங் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது பிணை மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.
இந்த கைது பரவலான சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, பலர் அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் அகில உலக கிருஷ்ண பக்திக் கழகத்தைத் தடை செய்யக் கோரி சட்டத்தரணி ஒருவர் தலைமையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது வகுப்புவாத அமைதியின்மையைத் தூண்டும் ஒரு “தீவிர அமைப்பு” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதவெறி வன்முறையைத் தூண்டும் நோக்கத்துடன் மத நிகழ்வுகளை ஊக்குவித்தல், பாரம்பரிய இந்து சமூகங்கள் மீது அதன் நம்பிக்கைகளைத் திணித்தல், மேலும் தாழ்த்தப்பட்ட இந்து சாதிகளைச் சேர்ந்த உறுப்பினர்களை வலுக்கட்டாயமாக சேர்த்துக் கொள்வது, கோவில்களை கையகப்படுத்துவது போன்ற பல குற்றச்சாட்டுகள் இந்த அமைப்பு மீது சுமத்தப்பட்டுள்ளது.
இஸ்கான் நாட்டை “ஸ்திரமின்மைக்கு ஆளாக்குகிறது” என்றும், வகுப்புவாத மோதலை ஊக்குவிக்க “இந்திய ஊடகங்களுடன் ஒத்துழைக்கிறது” என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று டாக்கா டிரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது.குறிப்பாக, சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து இஸ்கான் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
சின்மோய் கிருஷ்ண தாஸ் அண்மையில் கைது செய்யப்பட்டது குறித்து கவலையடைகிறோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பங்களாதேஷின் பல்வேறு பகுதிகளில் சனாதனவாதிகளுக்கு எதிரான வன்முறை மற்றும் தாக்குதல்களை நாங்கள் கண்டிக்கிறோம்.
அரசாங்க அதிகாரிகள், சனாதன சமூகத்தின் அமைதியான சகவாழ்வை ஊக்குவிக்க வேண்டும் ” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.