இந்தியா
முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்துடன் கொலை.. கல்லூரி மாணவர் தந்த பகீர் வாக்குமூலம்

முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்துடன் கொலை.. கல்லூரி மாணவர் தந்த பகீர் வாக்குமூலம்
முன்னாள் ராணுவ வீரரான ராஜேஷ் குமார், தலைநகர் டெல்லியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். 51 வயதான இவருக்கு, கோமல் என்ற மனைவியும், அர்ஜூன் தன்வர் மற்றும் கவிதா என்ற மகன், மகளும் உள்ளனர்.
புதன்கிழமை அன்று அதிகாலையில் மகன் அர்ஜூன் வாக்கிங் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டில் தனது பெற்றோர் மற்றும் சகோதரி கொலை செய்யப்பட்டு கிடப்பதாக உறவினர்கள் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் கூறியுள்ளார். மேலும், இந்தத் தகவலை அறிந்து விரைந்து வந்த போலீசார், மூன்று பேரின் உடலையும் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், அர்ஜூன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, சந்தேகப்படும்படி யாரும் அங்கு வந்து சென்றதற்கான எந்தவொரு தடயமும் இல்லை. இதனால், போலீசாரின் சந்தேகம் முன்னாள் ராணுவ வீரரின் மகன் மீது திரும்பியது.
அவரைப் பிடித்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ராஜேஷ்குமார் முன்னாள் ராணுவ வீரர் என்பதால், சிறு வயது முதலே தனது மகனை மிகுந்த கண்டிப்புடன் வளர்த்து வந்துள்ளார். சிறு, சிறு தவறுக்கெல்லாம் பொது வெளியில் வைத்து தனது மகனை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். மேலும், கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்து வரும் அர்ஜூன், டெல்லி சார்பில் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
ஆனால், அவர் குத்துச்சண்டையில் சாதிப்பதற்கு தந்தை தடைக்கல்லாக இருந்ததுடன், அம்மாவும், அக்காவும் தனக்கு எதிராக செயல்படுவதாகக் கருதியுள்ளார். ஒட்டு மொத்த குடும்பமும் தனக்கு எதிராக செயல்படுவதாக எண்ணிய அர்ஜூன், மூன்று பேரையும் தீர்த்துக்கட்ட சதித் திட்டம் தீட்டியுள்ளார்.
இந்த நிலையில், தனது தாய் – தந்தையின் திருமண நாள் அன்று அவர்களைக் கொலை செய்ய முடிவு செய்துள்ளார். சம்பவத்தன்று முதலில் தனது அக்கா கவிதாவை கத்தியால் குத்திக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர், மேல்தளத்தில் தூங்கிக் கொண்டிருந்த தனது தந்தையை கழுத்து அறுத்துக் கொடூரமாக கொலை செய்துள்ளார். இறுதியாக, பாத்ரூமில் இருந்த தனது தாயாரையும் ஈவு இரக்கமின்றி கொலை செய்துள்ளார்.
தனது தந்தை ராணுவத்தில் பயன்படுத்திய கத்தியால் மூன்று பேரையும் கொலை செய்ததாக அர்ஜூன் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னாள் ராணுவ வீரர் என்பதால் மிகுந்த கண்டிப்பு காட்டிய தந்தையின் செயலால், ஒட்டுமொத்த குடும்பத்தையும் ஈவு இரக்கமின்றி, அவரின் மகனே கொடூரமாக கொலை செய்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.