வணிகம்
RBI Gold Buying: அக்டோபரில் அதிகபட்ச தங்கத்தை வாங்கிய ரிசர்வ் வங்கி.. எவ்வளவு தெரியுமா?

RBI Gold Buying: அக்டோபரில் அதிகபட்ச தங்கத்தை வாங்கிய ரிசர்வ் வங்கி.. எவ்வளவு தெரியுமா?
அக்டோபரில் அதிக பட்ச தங்கத்தை வாங்கியதன் மூலம், இந்த நாடுகளை பின்னுக்கு தள்ளி ரிசர்வ் வங்கி உலக அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. அக்டோபர் மாதத்தில், உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் 60 டன் தங்கத்தை வாங்கியுள்ளன. இதில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 27 டன் தங்கத்தை வாங்கியதன் மூலம் முன்னணியில் உள்ளதாக உலக தங்க கவுன்சில் (WGC) கூறியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) மாதாந்திர அறிக்கையின் அடிப்படையில் இந்த WGC தரவுகளின்படி, அக்டோபர் மாதத்தில் இந்தியா தனது தங்க கையிருப்பை 27 டன்களாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை அதன் மொத்த தங்கத்தை 77 டன்களாக உயர்த்தியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் இந்த தங்க கொள்முதல், கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது என்று உலக தங்க கவுன்சில் (WGC) தெரிவித்துள்ளது. இந்த கொள்முதல் மூலம், இந்தியாவின் மொத்த தங்க இருப்பு இப்போது 882 டன்களாக உள்ளது. தங்கம் வாங்கும் விஷயத்தில் வளர்ந்து வரும் சந்தைகளின் மத்திய வங்கிகள் தங்கள் ஆதிக்கத்தை தக்கவைத்துள்ளதாக WGC தெரிவித்துள்ளது.
மேலும், ஜனவரி-அக்டோபர் 2024இல் துருக்கி மற்றும் போலந்து ஆகியவை முறையே 72 டன் மற்றும் 69 டன் தங்கம் கையிருப்பு அதிகரித்துள்ளன. இந்த இரு நாடுகளின் மத்திய வங்கிகள் மட்டும் இந்த ஆண்டு மொத்த உலக நிகர கொள்முதலில் 60 சதவீத தங்கத்தை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) நிதிக் கொள்கைக் குழுவின் கூட்டம் டிசம்பர் 4-ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் எம்பிசி (MPC) கூட்டத்தின் முடிவுகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நாணயக் கொள்கையில் ரிசர்வ் வங்கி அதன் விகிதங்களில் எந்த மாற்றத்தையும் செய்யாது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.