இந்தியா
“ஜாமீன் கிடைத்த ஏழு நாட்களில் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்” – உயர்நீதிமன்றம் உத்தரவு

“ஜாமீன் கிடைத்த ஏழு நாட்களில் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்” – உயர்நீதிமன்றம் உத்தரவு
உயர்நீதிமன்றம்
நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்கிய ஏழு நாட்களில், கைதிகள் சிறைகளில் இருந்து விடுதலையாவதை உறுதி செய்ய வேண்டும் என சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட 800க்கும் மேற்பட்டவர்கள், ஜாமீன் கிடைத்தும், பிணைத்தொகை செலுத்த முடியாமல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக, ‘டிடி நெக்ஸ்ட்’ ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜோதிர்ராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத்தரப்பு வழக்கறிஞர் முனியப்பராஜ், தமிழகம் முழுவதும் 153 விசாரணைக் கைதிகளும், 22 தண்டனைக் கைதிகளும், ஜாமீன் கிடைத்தும் பிணை செலுத்த முடியாததால் வெளிவர இயலவில்லை எனவும், மாவட்ட நீதிமன்றங்களில் இருந்து ஜாமீன் உத்தரவுகள் சிறைகளுக்குத் தாமதமாக அனுப்பப்படுகிறது எனவும் தெரிவித்தார். மேலும், மத்திய அரசு திட்டத்தைப் பின்பற்றி, ஏழைக் கைதிகளுக்கு நிதி உதவி வழங்கும் வகையில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஜாமீன் கிடைத்த ஏழு நாட்களில் கைதிகள் விடுதலையாவதை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், அதற்குத் தேவையான நடவடிக்கைகளை சட்டப் பணிகள் ஆணைக்குழு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
மாநிலம் முழுவதும் 800க்கும் மேற்பட்ட கைதிகள், ஜாமீன் கிடைத்தும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகப் பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், கைதிகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களை, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் சேகரித்து அறிக்கை தாக்கல் செய்யவும், அவர்களை விடுதலை செய்ய என்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலருக்கும் உத்தரவிட்டனர்.
அதேபோல, அரசு உதவித்திட்டம் மூலம் பயனடைந்த கைதிகளின் விவரங்களைச் சமர்ப்பிக்கும்படி அரசுத்தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மூன்று வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.