இலங்கை
பலவீனமடைந்து வரும் காற்றழுத்த தாழ்வு நிலை; வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு

பலவீனமடைந்து வரும் காற்றழுத்த தாழ்வு நிலை; வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு
வங்காள விரிகுடாவில் தெற்கு அந்தமான் தீவுக்கு அருகில் கடந்த வாரம் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது பலவீனமடைந்து வருகிறதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் நிலப்பகுதியை நோக்கியதாக காற்று வீசும் திசை அமைந்துள்ளதால் இந்த தாழமுக்கம் வலுப்பெறாமல், பலவீனமடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இந்த தாழமுக்கம் கிழக்கு கடற்பிராந்தியத்துக்கு அப்பாலுள்ள ஆழமான கடலிலேயே நிலை கொண்டுள்ளது.
எனவே அந்த பகுதியில் மாத்திரம் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்படும்.
இதன் போது குறித்த கடற்பகுதியில் தளம்பல் நிலை ஏற்படக் கூடும்.
குறிப்பாக காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக பொத்துவவில் வரையான கடற்கரைக்கு அப்பாலுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளில் மீனவர்கள் மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
இதன் மறைமுக தாக்கத்தால் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை அதிகரிக்கக் கூடும்.
மேலும் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்பதுடன் 30 – 50 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.