Connect with us

உலகம்

இஸ்ரேல் அனுமதி மறுப்பால் மரணத்தின் விளிம்பில் ஆயிரக்கணக்கான குழந்தைகள்!

Published

on

Loading

இஸ்ரேல் அனுமதி மறுப்பால் மரணத்தின் விளிம்பில் ஆயிரக்கணக்கான குழந்தைகள்!

இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களாலும், நோய்களினாலும் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகள் மருத்துவ உதவிக்காக காஸாவிலிருந்து வெளியேற இஸ்ரேலின் அனுமதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதில் பல குழந்தைகள் காத்திருக்கும் பொழுதே உயிரிழந்தும் வருகின்றனர் .

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் காஸா பகுதியின்மீது இஸ்ரேல் போர் தொடுத்து வருகின்றது. அதில் காஸாவில் மக்கள் நிரம்பிய குடியிருப்புப் பகுதிகளின் மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்களில் ஈடுப்பட்டு வருகின்றது. இந்தத் தாக்குதல்களினால் ஏற்பட்ட காயங்களினாலும் புற்றுநோய் போன்ற பல கொடிய நோய்களினாலும் பாதிக்கப்பட்ட ஆயிரக்ககணக்கான பொதுமக்கள் அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிபெற வேண்டுமென்றால், கட்டாயம் காஸாவை விட்டு வெளியேற வேண்டிய நிலையில் உள்ளர்.

Advertisement

ஆனால், அவர்கள் வெளியேற இஸ்ரேலின் அனுமதி தேவை என்பதினாலும், மாதக்கணக்கில் இஸ்ரேல் அவர்களுக்கு அனுமதி வழங்காமல் காத்திருக்க வைப்பதினாலும் ஆயிரக்கணக்கனோரின் உயிர்கள் ஆபத்தில் உள்ளன. இதில், குறைந்தது 2,500 குழந்தைகளாவது இருப்பார்கள் என்று கூறப்படுகின்றது.

போருக்கு முன்பு காஸாவில் செயல்பட்டு வந்த 36 மருத்துவமனைகளில், இப்பொழுது வெறும் 17 மட்டுமே செயல்படுகின்றன. கடந்த 15 மாதங்களாக காஸாவின் பெரும்பாலான மருத்துவமனைகள் தொடர் தாக்குதல்களுக்கு உள்ளாகிவருகின்றன.

இஸ்ரேல் நடத்தும் இந்தத் தாக்குதல்களினால் காயமடைந்து உடல் பாகங்களை இழந்த நிலையில் வந்துகொண்டே இருக்கும் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவம் அளிக்க போதிய மருத்துவ வசதிகள் இல்லாமல் மீதமுள்ள மருத்துவமனைகளும் தவித்து வருகின்றன. அதிலும், பல மருத்துவப்பணியாளர்கள் கொல்லப்படுவதினால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவம் பார்க்க ஆளில்லாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Advertisement

உயிருக்கு போராடிய நிலையிலிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் காஸாவிலிருந்து வெளியேற விண்ணப்பித்து இஸ்ரேலின் அனுமதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால், அவர்களை வெளியேற்ற இஸ்ரேல் அரசாங்கமும் இராணுவமும் தொடர்ந்து மறுத்து வருகின்றன.

அனுமதி மறுக்கப்படுவதினால் உயிரிழக்கும் குழந்தைகளைப் பற்றி காஸாவில் பணியாற்றிய யுனிசெஃப் அதிகாரியான ரோசாலியா போல்லென் கூறுகையில், “லியுக்மியா நோயினால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுவனான இஸ்லாம் அல்-ராய்ஹெனை மருத்துவத்திற்காக காஸா நகரத்தை விட்டு உடனடியாக வெளியேற்றப்பட வேண்டி, அச்சிறுவனின் குடும்பத்தினரால் ஆறு முறை இஸ்ரேலிடம் அனுமதி வேண்டி விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால், அந்த ஆறு முறையும் சரியான பதிலில்லாமல் பாதுகாப்பைக் காரணம் காட்டி அவனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதினால் போதிய மருத்துவ உதவிக்கிடைக்காமல் இஸ்லாம் அல்-ராய்ஹென் உயிரிழந்தான். மேலும், அவனைப் போல ஆயிரக்கணக்கான குழந்தைகள் மருத்துவ உதவிக்காக காத்திருக்கின்றனர். இதில் பலர் காத்திருக்கும் காலத்திலேயே உயிரிழந்துவருவது மிகுந்த வேதனையளிப்பதாக அவர் கூறினார்.

இந்த விவகாரத்தில் பாலஸ்தீனர்களின் மனிதாபிமான விவகாரங்களைக் கையாளும் இஸ்ரேலிய ராணுவத்தின் கோகாட் அமைப்பு, “மருத்துவத் தேவையுள்ள குழந்தைகளையும் அவர்களது குடும்பத்தினரையும் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்ததுடன், அவர்களின் மீது பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்ட பின்னரே வெளியனுப்பப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது. ஆனால், மரணமடைந்த சிறுவன் இஸ்லாமிற்கு அனுமதி மறுக்கப்பட்டதை பற்றிய கேள்விக்கு அந்த அமைப்பு எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை.

Advertisement

இதுப்பற்றி இஸ்ரேலின் ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், ”இஸ்ரேலின் உள்துறையின் புலனாய்வு குழுவால், விண்ணப்பிக்கும் நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் யாருக்கேனும் தீவிரவாதத்தோடு தொடர்புள்ளதா என்று விசாரிக்கப்பட்டு தெளிவான பின்னரே அனுமதி அளிக்கப்படும்” என்று கூறினார்.

நோயாளிகள் சிலரது விண்ணப்பங்கள் அனுமதிக்கப்பட்டாலும் அவர்களின் குடும்பத்தினரை அனுமதிக்காமல் பாதுக்காப்பைக் காரணம் காட்டி இஸ்ரேல் நிராகரித்து விடுகின்றது. அப்படி பாதிக்கப்பட்ட குழந்தைகளை கவனித்துக்கொள்ள அவர்களின் தாய்மார்களும் பாட்டிகளும் நிராகரிக்கப்படுவது மிகுந்த வேதனையான ஒன்று.

கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து 5,230 நோயாளிகள் மருத்துவத் தேவைக்காக வெளியேற்றப்பட்டதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Advertisement

ஆனால், இந்த ஆண்டு மே மாதம் ரஃபா எல்லை மூடப்பட்ட பின்னர் வெறும் 342 நோயாளிகள் மட்டுமே வெளியேற்றப்பட்டனர்.

இஸ்ரேலின் தாக்குதலுக்கு பின்னர் காஸாவின் மருத்துவ அமைப்புகள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றன. போதுமான அளவில் மருத்துவ உபகரணங்களும் இல்லாததினாலும் மருந்துகளின் தட்டுப்பாடினாலும் மருத்துவப் பணியாளர்கள் இல்லாததினாலும், அறுவை சிகிச்சைகள் புற்று நோய் சிகிச்சை போன்றவற்றை காஸாவில் மேற்கொள்வது பெரும் போராட்டமாகியுள்ளது.காஸாவில் செயல்பட்டுவந்த ஒரேயொரு புற்றுநோயிற்கான சிறப்பு மருத்துவமனையையும், இஸ்ரேலிய படைகள் கைப்பற்றி தகர்த்ததினால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் உயிரைக் காப்பாற்றுவது இயலாதவொன்றாக மாறியுள்ளது.

மருத்துவ அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடினால், தாக்குதலடைந்த மக்களின் உயிரைக் காப்பாற்ற பாதிப்படைந்த பாகங்கள் உடலிலிருந்து வெட்டி அகற்றப்பட வேண்டிய சூழலில் மக்கள் உள்ளனர். இப்படி காப்பாற்றப்பட்டு கை, கால்களை இழந்த நிலையில் பல குழந்தைகள் காஸாவிலுள்ளனர்.

Advertisement

கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இந்தப் போரில் இஸ்ரேலின் தாக்குதல்களினால் காஸா மக்கள் 44,500 பேர் கொல்லப்பட்டும் 1,05,000 பேர் காயமடைந்தும் உள்ளனர்.

கிட்டத்தட்ட 14,000 நோயாளிகள் மருத்துவ உதவி பெற உடனடியாக காஸாவிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கூறும் நிலையில் காஸாவின் சுகாதார அமைச்சகம் அதை 22,000 ஆக உயர்த்தியுள்ளது. அதிலும், 7,000 பேர் உயிர் பிழைக்க அவசரமாக காஸாவிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என காஸா சுகாதார அமைச்சகத்தின் அதிகாரி முஹம்மது அபு சால்மெயா கூறியுள்ளார்.

காஸாவில் தாங்கள் வாழும் காலத்திலேயே தகுந்த நேரத்தில் உரிய மருத்துவம் கிடைக்காமல் தங்களது குழந்தைகளின் மரணத்தை பல பெற்றோர்கள் சந்தித்து வருகின்றனர்.

Advertisement

பாதுகாப்புக்காக என்று இஸ்ரேல் நிராகரித்த பலரது விண்ணப்பங்களும் சர்வதேச நிறுவனங்களான உலக சுகாதார அமைப்பு மற்றும் யுனிசெஃப் ஆகியவற்றின் மூலமாக அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன