இந்தியா
தூண் ஒன்று… தண்டவாளங்கள் 5.. உலகில் முதல்முறையாக சென்னை மெட்ரோ புதிய முயற்சி!

தூண் ஒன்று… தண்டவாளங்கள் 5.. உலகில் முதல்முறையாக சென்னை மெட்ரோ புதிய முயற்சி!
சென்னையின் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இரண்டாம் கட்டப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், முதல் திட்டமாக பூவிருந்தவல்லி புறவழிச் சாலையிலிருந்து வடபழனி வரை 15 கிலோமீட்டர் தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், ஆற்காடு சாலைப் பகுதியில் சுரங்கப் பாதை மூலம் திட்டத்தை மேற்கொள்ள மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டது.
இதற்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் நிதி சுமை ஏற்படும் என்பதால், குறுகிய பாதையான வடபழனி முதல் போரூர் வரை உள்ள 4 கிலோமீட்டர் தொலைவுக்கு ஒரே தூணில் நான்கு ரயில்கள் வந்துசெல்லவும், ரயில்கள் இடமாற்றிக் கொள்ளவும் ஒரு லூப் லைனும் சேர்த்து 5 தண்டவாளங்கள் இரட்டை அடுக்குகளாக அமைக்கப்படுகின்றன. மேலும், இதற்கான ரயில் நிலையங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த எடையைத் தாங்கும் வகையில், 75 மீட்டர் அளவுக்கு பூமியில் புதைக்கப்பட்டு தூண்கள் அமைக்கப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குநர் அர்ச்சுனன் தெரிவித்துள்ளார். இது உலகிலேயே முதல்முறை என்று அவர் பெருமிதம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அர்ச்சுனன் மேலும் பேசுகையில், “இதில் மிக முக்கியமானது ஒரு மெட்ரோ ரயில் மேல் இன்னொரு மெட்ரோ ரயில். உலகத்திலேயே முதல்முறையாக நாம் தான் இப்படி கட்டுகிறோம். இதில் மிகப்பெரிய சவால் ஆற்காடு ரோடில், 4 கி.மீ-க்கு 4 ரயில் நிலையங்கள் கொண்ட நீளமான பாதை அமைப்பதுதான்.” என்றார்.
இதற்கிடையே, சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் மிக முக்கிய திட்டங்களில் பிரதான இடத்தைப் பிடித்துள்ள மெட்ரோ ரயில்கள், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. எனினும், மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை விரைந்து முடித்து ரயில் சேவையைத் தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.