இலங்கை
சர்வதேசத்தின் உதவியுடன் ஊழல் மோசடியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள்!

சர்வதேசத்தின் உதவியுடன் ஊழல் மோசடியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள்!
அமைச்சர் நளிந்த அறிவிப்பு
ஊழல் மோசடியாளர்களுக்கு எதிராக, சர்வதேசத்தின் உதவியுடன் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மிக் விமானங்கள் மற்றும் எயார் பஸ் ஆகியவற்றின் கொள்வனவின்போது மோசடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில், ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரசேகர மற்றும் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன ஆகியோருக்கு அமெரிக்கா நேற்றுப் பயணத்தடைகளை பிறப்பித்துள்ளது.
இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ள அமைச்சரவைப் பேச்சாளரான நளிந்த ஜயதிஸ்ஸ, மேலும் தெரிவித்ததாவது:
கடந்த ஆட்சிக் காலங்களில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிச்சயம் நாம் நிறைவேற்றுவோம். விசாரணைகளை மேற்கொள்ளும்போது ஊழல்வாதிகள் கூச்சலிடுகின்றனர். அந்தக் கூச்சலுக்கு அச்சமடைபவர்கள் நாங்கள் அல்லர்.
உதயங்க வீரசேகர மற்றும் கபில சந்திரசேன ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் எமது விசாரணையை இலகுப்படுத்தியுள்ளன. தாம் ஊழல்வாதிகள் அல்லர் என்று தெரிவித்தவர்கள் தற்போது எவ்வாறான கருத்தக்களை வெளிப்படுத்தவுள்ளனர்? என்று கேட்க விரும்புகின்றேன்.
அரசாங்கம் என்ற ரீதியில் இவர்களுக்கு எதிராக கடுமையான முறையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். கடந்த காலங்களில் தம்மை நிரபராதிகள் என நிரூபிக்க முற்பட்டவர்களுக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தீர்ப்பு சிறந்த பாடமாகும் – என்றார். (ச)