இந்தியா
சென்னை மக்களே அலெர்ட்.. செம்பரம்பாக்கம் ஏரி இன்று திறப்பு.. முழுவதுமாக நிரம்பிய பூண்டி ஏரி!

சென்னை மக்களே அலெர்ட்.. செம்பரம்பாக்கம் ஏரி இன்று திறப்பு.. முழுவதுமாக நிரம்பிய பூண்டி ஏரி!
வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால், சென்னையில் நேற்று கனமழை பெய்தது. குறிப்பாக கோயம்பேடு, அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, ஆலந்தூர், சைதாப்பேட்டை, வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு கனமழை கொட்டியது. அதிகபட்சமாக சென்னை கொளத்தூரில் நேற்று காலை 8.30 மணி வரை 8.5 சென்டி மீட்டர் அளவிற்கு மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து, நெற்குன்றத்தில் 7.9 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அமைந்தகரை, அயப்பாக்கம், பேசின் பிரிட்ஜ், தண்டையார்பேட்டை, பெரம்பூர், அண்ணாநகர் மேற்கு உள்ளிட்ட பகுதிகளில் தலா 7 சென்டி மீட்டர் மழை பெய்தது.
தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பிய நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று காலை 8 மணிக்கு நீர் திறக்கப்படவுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால், செம்பரம்பாக்கம் பகுதியில் மட்டும் நேற்று 14 செ.மீ மழை பதிவானது.
இதன்காரணமாக ஏரிக்கு நேற்று காலை 743 கனஅடி நீர் வந்துகொண்டிருந்த நிலையில், தொடர்ந்து தற்போது விநாடிக்கு 6998 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. நேற்று 21.50 அடியாக இருந்த செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தற்போது 23 அடியை கடந்துள்ளது.
இதனையடுத்து ஏரியின் பாதுகாப்பு கருதி இன்று காலை 8 மணிக்கு உபரி நீர் திறக்கப்பட இருக்கிறது. 24 அடி உயரம் கொண்ட ஏரியில் 22 அடியை நீர்மட்டம் கடந்ததை அடுத்து நீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விநாடிக்கு 1000 கனஅடி நீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏரியில் நீர் திறக்கப்படுவதையொட்டி கரையோரம் உள்ள கிராமங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சென்னையின் நீர் ஆதாரமாக விளங்கும் மற்றொரு ஏரியான பூண்டி ஏரியில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் பூண்டி நீர் தேக்கத்தில் இருந்து தற்போது 12,760 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
நேற்று 5000 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று காலை முதல் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பூண்டியில் மொத்த உயரம் 35 அடியில் 35 அடியும் நிரம்பி வழிகிறது. இதனை அடுத்து பாதுகாப்பு கருதி பொதுப்பணித்துறை கூடுதல் நீரை திறந்துவிட்டுள்ளனர். இதேபோல், புழல் ஏரியில் 500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015ல் சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டதற்கு முக்கிய காரணமாக அமைந்தது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டதே. தற்போது செம்பரம்பாக்கம் ஏரியுடன், பூண்டி ஏரியிலும் நீர் திறக்கப்பட்டு இருப்பதால் சென்னை மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். ஆனால், நீர் திறப்பதை உன்னிப்பாக கவனிக்கும் பணியில் நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.