இந்தியா
டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது; உயர் நீதிமன்றம் உத்தரவு

டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது; உயர் நீதிமன்றம் உத்தரவு
2024ம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கக் கூடாது என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
சங்கீத கலாநிதி எம்.எஸ். சுப்புலட்சுமி விருதை பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 2024ம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கக் கூடாது என தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.
இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பி.தனபால் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுப்புலட்சுமியின் பேரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “தனக்கு நினைவிடம், தனது அறக்கட்டளை அமைக்கக்கூடாது என சுப்புலட்சுமி உயில் எழுதி வைத்துள்ள நிலையில் அவரது பெயரில் விருது வழங்கக்கூடாது” என தெரிவித்தனர். மேலும், சுப்புலட்சுமி குறித்து டி.எம்.கிருஷ்ணா மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேல்முறையீட்டு மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “கடந்த பத்தாண்டுகளாக எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்கப்பட்டு வரும் நிலையில் விருது வழங்கக்கூடாது என தற்போது மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும்” கூறினர். மேலும், சொத்து உள்ளிட்டவைகளுக்கு மட்டுமே உயில் எழுதி வைத்தது பொருந்தும் எனவும் விருதுக்குப் பொருந்தாது என்வும் தெரிவித்தனர்.
இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கக் கூடாது என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.