இந்தியா
E.V.K.S. Elangovan | ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் உடலுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி : இன்று மாலை இறுதிச்சடங்கு

E.V.K.S. Elangovan | ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் உடலுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி : இன்று மாலை இறுதிச்சடங்கு
75 வயதான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தந்தை பெரியாரினுடைய அண்ணனின் பேரன் ஆவார். தனது மகன் திருமகன் ஈவெராவின் திடீர் மறைவுக்குப் பிறகு, கடந்த ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எம்.எல்.ஏ., எம்பி., மத்திய இணை அமைச்சர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் என பல பொறுப்புகளை வகித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், காய்ச்சல் காரணமாக கடந்த நவம்பர் 11 ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், அவருக்கு நுரையீரல் சார்ந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சிகிச்சைப் பலனின்றி நேற்று காலை காலமானார்.
இதனையடுத்து சென்னை சத்தியமூர்த்தி பவனில் உள்ள அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. மருத்துவமனையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உடல், சென்னை மணப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவர் தமிழிசை, நடிகை குஷ்பு ஆகியோரும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
முகலிவாக்கத்தில் உள்ள மின்மயானத்தில் இன்று மாலை இறுதிச்சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் இறுதி ஊர்வலம் இன்று பிற்பகலில் நடைபெறும் என்றும், மணப்பாக்கம் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.