நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 16/12/2024 | Edited on 16/12/2024

இயக்குநர் அட்லீ, ஏ ஃபார் ஆப்பிள் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் சார்பில் தற்போது இந்தியில் வருண் தவானின் 18வது படமான ‘பேபி ஜான்’ படத்தை தயாரித்து வருகிறார். இதன் மூலம் தயாரிப்பாளராக பாலிவுட்டில் அறிமுகமாகிறார். அட்லீ நிறுவனத்துடன் ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் சினி 1‌ ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்களும் இப்படத்தை தயாரித்துள்ளார்கள். 

இப்படத்தை காளீஸ் இயக்கும் நிலையில் கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி நடித்துள்ளனர். மேலும் ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். தமன் இசையமைக்கும் இப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஆக்சன் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் தெறி படத்தின் இந்தி ரீமேக் என தெரிகிறது. படத்தின் பாடல்கள் சமீபத்தில் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. 

Advertisement

அண்மையில் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடந்த நிலையில் அதில் பேசிய அட்லீ, விஜய், ஷாருக்கான், சல்மான் கான் உள்ளிட்ட நடிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்த நிலையில் ரிலீஸுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தற்போது புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் பிஸியாக உள்ளனர். அந்த வகையில் பிரபல பாலிவுட் நிகழ்ச்சியான ‘கபில் சர்மா ஷோ’-வில் அட்லீ, வருண் தவான், கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளரான கபில் சர்மா, அட்லீயை பார்த்து, “முதல் முறையாக ஒரு ஸ்டாரை நீங்கள் சந்திக்கும் போது அவர்கள் அட்லீ எங்கே என கேட்டிருக்கிறார்களா?” என்று உருவக் கேலி செய்யும் தொனியில் கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதிலளித்த அட்லீ, “உங்கள் கேள்வியின் நோக்கத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அதற்கு நான் பதில் சொல்ல முயற்சிக்கிறேன். இந்த நேரத்தில் ஏ.ஆர்.முருகதாஸுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஏனென்றால் அவர் தான் என்னுடைய முதல் படத்தை தயாரித்தவர். அவர் என்னுடைய ஸ்கிரிப்டை மட்டும்தான் கேட்டார். அதைத் தவிர நான் எப்படி இருக்கிறேன், இதை என்னால் பண்ண முடியுமா இல்லையா என பார்க்கவில்லை. ஆனால் அவர் நான் சொல்லும் விதத்தை விரும்பினார். இதைப் போலத்தான் உலகமும் பார்க்க வேண்டும் என நினைக்கிறேன். யாரையும் அவர்களின் வெளித்தோற்றத்தை வைத்து மதிப்பிடக்கூடாது. அவர்களின் உள்ளத்தை வைத்து மதிப்பிட வேண்டும்” என்றார். இந்தப் பதில் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. அட்லீக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து இது தொடர்பான வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றன.